குஜராத் சட்டசபைத் தேர்தலுக்கு விறுவிறுப்பாக களமிறங்கும் மோடி... இன்று முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம்
பிரதமர் மோடி இன்று முதல் வரும் 20ம் தேதி வரை 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
காந்திநகர்: குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலை குறிவைத்து, மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று அம்மாநிலத்திற்கு செல்கிறார். இன்று முதல் வரும் 20ம் தேதி வரை 3 நாட்கள் குஜராத்தில் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
முதலாவதாக இன்று மாலை காந்திநகரில் உள்ள பள்ளிகளுக்கான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை பிரதமர் பார்வையிடுகிறார்.
இதனை தொடர்ந்து, நாளை காலை பனஸ்கந்தாவின் தியோதரில் உள்ள பனஸ் பால் பண்ணை வளாகத்தில் பல்வேறு திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி, பிற்பகல் ஜாம் நகரில் உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருந்துகளுக்கான சர்வதேச மையத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
இதனையடுத்து, நாளை மறுதினம், காந்திநகரில் சர்வதேச ஆயுஷ் முதலீடு மற்றும் புதுமைக் கண்டுபிடிப்பு மாநாட்டையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
அதன் பின்னர், டாஹோத்தில் சுமார் 22 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் குஜராத் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான தொடக்கமாக இந்த நிகழ்ச்சி பார்க்கப்படுகிறது.
மொத்தம் 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபையில், கடந்த தேர்தலில் பாஜக 99 இடங்களில் வென்று இருந்தது. சட்டசபைத் தேர்தலுக்கு இப்போதே நாலு கால் பாய்ச்சலில் தயாராகி வருகிறது பாஜக.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றும் என்று நம்பிக்கையோடு கூறியுள்ளார் ராகுல்காந்தி.
குஜராத்தில் கடந்த பல ஆண்டு காலமாகவே பாஜக ஆட்சிதான் நடந்து வருகிறது. ஏழு முறை குஜராத்தில் ஆட்சி அமைத்த பாஜக, வரும் சட்டசபைத் தேர்தலிலும் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் புதிய மாற்றங்களை செய்து வருகிறது. எட்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றுமா பாஜக பார்க்கலாம்.