குஜராத் தேர்தல்.. வியூகத்தை மாற்றிய காங்கிரஸ்.. களம் இறங்கும் ராகுல் காந்தி.. கையை பிசையும் பாஜக!
காந்திநகர்: குஜராத் தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், இன்று அதிரடியாக களம் இறங்கும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அங்கு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.
மும்முனைப் போட்டியால் தகித்து வரும் குஜராத் தேர்தல் களத்தில் புது வியூகத்துடன் இறங்கி ராகுல் காந்தி அதிரடி காட்டவுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஆம் ஆத்மியின் அசுர வளர்ச்சியை கண்டு பீதி அடைந்திருக்கும் பாஜக, ராகுல் காந்தியின் வருகையால் சற்று பதற்றம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

மாறி வரும் காட்சிகள்..
குஜராத் தேர்தல் களத்தில் நாளுக்கு நாள் காட்சிகள் மாறிக் கொண்டே வருகின்றன. ஒரு சமயம் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துவிடுமோ என்பது போன்ற தோற்றம் வெளிப்பட்டு, பின்னர் காங்கிரஸின் கை ஓங்குவதை பார்க்க முடிகிறது. இதையடுத்து சில நாட்களிலேயே, இந்த இரு கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி ஆம் ஆத்மி பந்தயத்தில் முந்துவது போன்ற காட்சிகள் தெரிகின்றன. இதனால் பெரிய அரசியல் நிபுணர்களாலேயே கூட எதிர்வரும் குஜராத் தேர்தலை சரியாக கணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

குஜராத்தை சுற்றி வரும் மோடி..
குஜராத் தேர்தலை பொறுத்தவரையில் பாஜகவும், காங்கிரஸும் வாழ்வா சாவா என்ற ரீதியிலேயே அணுகுகிறது. குஜராத் தேர்தல்தான் எதிர்வரும் மக்களவைத் தேர்தலை தீர்மானிக்கும் காரணியாக மாறி வரும் நிலையில், இரண்டு தேசியக் கட்சிகளும் தனது முழு பலத்துடன் இந்த தேர்தலில் இறங்குகிறது. இதை உணர்ந்ததாலேயே பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல முக்கிய பாஜக தலைவர்கள் குஜராத்தில் பல முறை பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று கூட, பிரதமர் மோடியும், அமித் ஷாவும் குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர். ஆனால், காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தேசிய அளவிலான முக்கிய தலைவர்கள் பெரிய அளவில் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.

களத்தில் இறங்கும் ராகுல் காந்தி..
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குஜராத்துக்கு இன்று வருகை தந்து சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறார். பாரத் ஜோடா யாத்திரையில் கலந்துகொண்டிருப்பதால் ராகுல் காந்தியால் குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் முழுவீச்சில் பங்கேற்க முடியாமல் இருந்தது. இந்நிலையில், சூரத் மாவட்டம் மற்றும் ராஜ்கோட் நகரில் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறார். இதற்காக அங்கு பிரம்மாண்ட ஏற்பாடுகளை குஜராத் காங்கிரஸார் செய்துள்ளனர். ராகுல் காந்தி வருகையால் குஜராத் தேர்தலில் பெரிய அளவில் மாற்றம் நிகழும் என காங்கிரஸார் உறுதியாக நம்புகின்றனர்.

பாஜகவுக்கு குறையும் ஆதரவு..
குஜராத் தேர்தலை பொறுத்தவரை, பாஜகவுக்கு மக்கள் மத்தியில் பழைய மாதிரியான ஆதரவு இல்லை என்பது கண்கூடாகவே தெரிகிறது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. பாஜகவுக்கு படேல் உள்ளிட்ட பல பெரும்பான்மை ஜாதிகளின் ஆதரவு குறைந்துள்ளதை கவனித்திருக்கும் காங்கிரஸ், அந்த சமூகங்களைச் சேர்ந்த மக்களை கவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

வியூகத்தை மாற்றிய காங்கிரஸ்..
இந்த முறை ஜாதிக் காய்களை சரியாக பயன்படுத்திக் கொண்டால் தங்கள் பக்கம் ஆட்சி வந்துவிடும் என்பதை காங்கிரஸ் தலைமையும் உறுதியாக நம்புகிறது. இதனைக் கருத்தில்கொண்டு, இதுவரை பாஜகவை நிர்வாக ரீதியில் மட்டுமே குற்றம்சாட்டி வந்த காங்கிரஸ், தற்போது ஒவ்வொரு ஜாதிக்கும் பாஜக ஆட்சியில் என்னென்ன அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை பட்டியல் போட்டு பிரச்சாரம் செய்யவுள்ளது. அந்த வகையில், இன்று முதல் குஜராத்தில் தீவிர பிரச்சாரத்தில் இறங்கவுள்ள ராகுல் காந்தி, முழுக்க முழுக்க பெரும்பான்மை ஜாதிகளை தங்கள் பக்கம் இழுக்கும் செயலில் இறங்குவார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸின் இந்த வியூகத்தை தெரிந்துகொண்ட பாஜக, தற்போது என்ன செய்வதென தெரியாமல் கையை பிசைந்து வருகிறது.












Click it and Unblock the Notifications