உத்தரகாண்ட்: புதிய முதல்வராக ஹரீஸ் ரவாத் பதவியேற்பு
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹரீஸ் ரவாத் நேற்று பதவியேற்றார்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக விஜய் பகுகுணா பதவி விலகியதையடுத்து, நேற்று புதிய முதல் அமைச்சரைத் தேர்வு செய்வது தொடர்பான காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் டேராடூனில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திரிவேதி மற்றும் அம்பிகா சோனி ஆகியோர் கலந்து கொண்டு எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தின் முடிவில் உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக 66 வயது ஹரீஸ் ரவாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, நேற்று ஹரீஸ் ரவாத் உத்தரகாண்ட் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
அல்மோரா மாவட்டத்தில் உள்ள மோகனாரி கிராமத்தில் ராஜபுத்திர வம்ச குடும்பத்தில் பிறந்த ஹரீஸ் ராவத், இதற்கு முன் மத்திய விவசாயத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.