பீகார் சட்டசபைத் தேர்தலில் கடந்த 15 ஆண்டுகளில் முதல்முறையாக அதிக அளவில் வாக்குப் பதிவு
பாட்னா: பீகாரில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் சராசரியாக 56.8 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 15 ஆண்டுகளில் இந்த அளவுக்கு அதிகமாக வாக்குகள் பதிவானது இதுவே முதல் முறையாகும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று நடந்த 5-ம் கட்ட இறுதி வாக்குப்பதிவில் 60 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. 8-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்று பீகாரில் ஆட்சி பீடத்தில் அமரப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் சில செய்தி நிறுவனங்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்றும், மற்றும் பல செய்தி நிறுவனங்கள் நிதீஷ் குமார், லாலு, காங்கிரஸ் ஆகியோரைக் கொண்ட மெகா கூட்டணி வெற்றி பெறும் என்றும் தங்களது கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், நேற்று மாலை, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, பீகார் தேர்தல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்துக்கு பின்னர் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின்போது, மத்திய அமைச்சர்கள் சிலரும் பங்கேற்றனர்.
பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டசபைத் தொகுதிகளுக்கு கடந்த மாதம் 12-ஆம் தேதி தொடங்கி, 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மதச்சார்பற்ற மகா கூட்டணியாகவும், பாஜக- லோக் ஜனசக்தி - ஹிந்துஸ்தான் ஆவாம் மோர்ச்சா- ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி ஆகியவை இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியாகவும் போட்டியிட்டுள்ளன.