ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் விளையாடும் நம்பர் “370” – அப்படி என்னதான் இருக்கு அதில்?
டெல்லி: மிஷன் காஷ்மீர் - நாட்டின் மிகவும் சுவாரஸ்யமான ஒரு தேர்தலாக மாறியுள்ளது ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபைத் தேர்தல். இந்தத் தேர்தலில் மிக முக்கியமான தேர்தல் பிரச்சினையாக அரசியல் சட்டத்தின் 370 ஆவது பிரிவு திகழ்கிறது. இந்த சட்டப் பிரிவை காஷ்மீரில் அமலாக்கியிருப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு பிரிவும், கூடாது என்று இன்னொரு பிரிவும் தொடர்ந்து கூறி வருகிறது.
இந்த 370 ஆவது பிரிவு குறித்த பார்வை இது.
எளிய வார்த்தைகளில் சொல்வதானால், அரசியல் சட்டத்தின் 370 ஆவது பிரிவு என்பது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தாகும்.
இந்த சட்டப் பிரிவை, சலுகையை, திரும்பப் பெற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் கூடாது என்று காஷ்மீரில் வலுவான குரல்கள் எதிரொலித்து வருகின்றன. ஆனால் உண்மை என்னவென்றால் இந்த சட்டப் பிரிவு அமலாக்கம் என்பது ஒரு தற்காலிக ஏற்பாடுதான்.
370 என்றால் என்ன?:
அரசியல் சட்டத்தின் 21வது பகுதியில், இந்த சிறப்பு தற்காலிக அந்தஸ்து குறித்துக் கூறப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தற்காலிகமாக சிறப்பு அந்தஸ்து தருவது குறித்து அதில் விளக்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரமடைந்த பின்னர் இந்த சிறப்புச் சலுகை அமலுக்கு வந்தது. அபபோதைய ஜம்மு காஷ்மீர் மன்னர், இந்தியாவுடன் இணைவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் இந்த சிறப்புச் சலுகை அந்தஸ்து அமலாக்கப்பட்டது.
1947 ஆம் ஆண்டு இது அமலுக்கு வந்தது. அப்போது ஷேக் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் பிரதமராக இருந்தார். அவரை மகாராஜா ஹரி சிங்கும், ஜவஹர்லால் நேருவும் இணைந்து நியமித்திருந்தனர். அப்போது 370 ஆவது பிரிவை நிரந்தரமாக ஜம்மு காஷ்மீரில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று ஷேக் அப்துல்லா கோரிக்கை விடுத்தார். மேலும் எப்போதும் ஜம்மு காஷ்மீருக்கு பூரண சுயாட்சி உரி்மை இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆனால் அதை அப்போதைய மத்திய அரசு ஏற்கவில்லை. இந்த சட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநில அரசு பல சிறப்பு தனிச் சட்டங்களை வைத்துள்ளது. நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு தனியாக சட்டம் உள்ளது. சொத்து விவகாரம், குடியுரிமை, அடிப்படை உரிமைகள் என பலவற்றிலும் இம்மாநில மக்கள், மற்ற பகுதி மக்களிடமிருந்து வேறுபடுகிறார்கள்.
பாதுகாப்பு, தகவல் தொடர்பு, வெளியுறவுத்துறை ஆகியவற்றில் மட்டுமே மத்திய அரசால் ஜம்மு காஷ்மீர் மாநில அரசைக் கட்டுப்படுத்த முடியும். 370 ஆவது பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநில அரசு பல்வேறு அதிகாரங்களை தன்னகத்தே வைத்துள்ளது. இருப்பினும், இந்த சட்டத்தைப் பயன்படுத்தி நிதி அவசர நிலையை மாநில அரசால் பிரகடனப்படுத்த முடியாது.
அதேசமயம், மாநிலம் தொடர்பான அனைத்து முடிவுகளையும் மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்த பின்னரே எடுக்க முடியும்.
ஏன் நீக்க வேண்டும்?
இந்த சட்டப் பிரிவை நீக்க வேண்டும் என்று கோருவோர் கூறும் முக்கியக் காரணம், இந்த சட்டப் பிரிவு இருப்பதால்தான் ஜம்மு காஷ்மீர் மாநிலம் வளராமலேயே உள்ளது என்பதாகும். இந்த சட்டம் அமலில் இருக்கும் வரை, இந்த மாநிலத்தில் யாரும் நிலம் வாங்க மாட்டார்கள், வாங்கவும் முடியாது. எந்தவிதமான வளர்ச்சித் திட்டமும் இங்கு கொண்டு வரப்பட முடியாது.
வெளியிலிருந்து வரும் யாரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலம் வாங்க முடியாது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலமானது, இந்த சட்டத்தால், இந்தியாவின் அடையாளத்திலிருந்து முற்றிலும் தனித்து நிற்கிறது. இதனால் இந்த மாநில மக்கள் இந்தியர்கள் அல்லாதோர் என்ற ஒரு உணர்வுக்கு உட்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு முழுமையான இந்தியர் என்ற உணர்வு ஏற்படுவதை தடுப்பதாக இந்த சட்டப் பிரிவு உள்லது.
இந்த மாநிலத்தில் வெளியிலிருந்து யாரும் வந்து முதலீடுகளை மேற்கொள்ள முடியாது. இதனால் இ்ம்மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகம் உள்ளது. பல இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இதனால் ஆயுதங்களைத் தூக்குகின்றனர். எனவே இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்பது எதிர்ப்பாளர்களின் கோரிக்கையாகும்.
இந்த சட்டப் பிரிவானது தற்காலிகமானது என்பதை அனைவரும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். சுத்திரத்திற்குப் பின்னர் இம்மாநிலத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய குழப்ப சூழ்நிலை காரணமாக இந்த சட்டப் பிரிவு அமலாக்கப்பட்டது. இந்தியாவின் முழுமைாயன மாநிலமாக மாறுவதற்கு வாய்ப்பு தரும் வகையில் இப்பிராந்தியத்தில் இந்த சட்டப் பிரிவு கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டப் பிரிவு அமலாக்கப்பட்டபோது, இது தற்காலிகமான ஒன்றுதான் என்று தெளிவாக கூறப்பட்டிருந்தது. முழுமையான இந்திய மாநிலமாக மாறியதும் இந்த சட்டப் பிரிவு நீக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதை ஒரு சாதாரண பொது அறிவிக்கை மூலம் குடியரசுத் தலைவர் நீக்க முடியும். இருப்பினும்
இதற்கு மாநில சட்டசபையில் ஒப்புதல் தரப்பட வேண்டும்.
ஏன் தேசிய மாநாட்டுக் கட்சி எதிர்க்கிறது?
இந்த சட்டப் பிரிவை நீக்கினால், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதி மக்கள் தங்களது சுய அடையாளத்தை இழக்க நேரிடும் என்பதால்தான் இதை எதிர்ப்பதாக தேசிய மாநாட்டுக் கட்சி கூறுகிறது. மேலும் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு என்று ஒரு தனித்துவம் உள்ளது. அது முற்றிலும் மாறிப் போய் விடும் என்பதும் தேசிய மாநாட்டுக் கட்சியின் வாதமாகும்.
இருப்பினும் ஜம்மு காஷ்மீர் மக்கள் முழுமையான இந்திய மக்களாக தாங்கள் இருக்க வேண்டும் என்று விரும்பினால் இந்த சட்டப் பிரிவை நீக்க அவர்களே குரல் கொடுக்க வேண்டும், அப்போதுதான் ஒரே இந்தியா, என்ற கொள்கைக்குள் அவர்கள் வர முடியும் என்பது நிபுணர்களின் கருத்தாகும்.