ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல்.. பெங்களூரில் ஏடிஎம்கள் முடங்கின.. பணம் கிடைக்காமல் மக்கள் அவதி
பெங்களூர்: ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதலால் பெங்களூரில் நூற்றுக்கணக்கான ஏடிஎம்கள் முடங்கின. மக்கள் பணம் எடுக்க சிரமப்பட்டனர்.
உலகம் முழுக்க ரேன்சம்வேர் வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கம்ப்யூட்டரிலுள்ள தகவல்களை இந்த வைரஸ் அழித்துவிடும் என்பதால் நெட்டிசன்கள் அச்சத்தில் உள்ளனர்.
அட்டாச்மென்டுடன் வரும் இமெயில்களை ஓபன் செய்யாமல் இருப்பதுதான் தப்பிக்க இருக்கும் வழி என்கிறார்கள் கம்ப்யூட்டர் வல்லுநர்கள். ஆனால், பெங்களூரில் மக்கள் வேறு விதமான பிரச்சினையை சந்தித்துள்ளனர்.
ஏடிஎம்கள் மூடல்
பெங்களூரிலுள்ள நூற்றுக் கணக்கான ஏடிஎம்கள் நேற்று செயல்படவில்லை. பணம் இல்லை, அவுட்ஆப் ஆர்டர் என்ற போர்டுகள் ஏடிஎம் வாசல்களில் தொங்கின. இது பண மதிப்பிழப்புக்கு பிந்தைய பிரச்சினைதான் என மக்கள் நினைத்தனர். ஆனால் ரேன்சம்வேர் வைரஸ்தான் இதற்கு காரணம் என்பது அம்பலமாகியுள்ளது.
வைரஸ் தாக்குதல்
எஸ்.பி.ஐ வங்கி சங்க செயலாளர் ஆர்.ரமேஷ் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பெங்களூரிலுள்ள பல ஏடிஎம்கள் ரேன்சம்வேர் வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏடிஎம்களின் ராம் பகுதியை அவை பாதிப்படைய செய்தன. பழைய சாப்ட்வேர் செயல்பாட்டிலுள்ள ஏடிஎம்களைத்தான் அவை பாதிப்படைய செய்தன. புதிய சாப்ட்வேர் கொண்ட ஏடிஎம்களில் அவை பாதிப்படைய செய்ய முடியவில்லை என்றார்.
ஏடிஎம்கள் அதிகம்
கர்நாடகாவில் மொத்தம் 18000 ஏடிஎம்கள் உள்ளன. இதில் 10000 ஏடிஎம்கள் பெங்களூரில்தான் உள்ளன. ஏடிஎம்களில் பணம் இல்லை என்பதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
படிப்படியாக சீரடைவு
இதுகுறித்து அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் அமைப்புப செயலாளர் சீனிவாசன் கூறுகையில், ஏடிஎம்களை சரிபார்க்கும் பணி நடக்கிறது. விரைவில் சரி செய்யப்படும். வாடிக்கையாளர்கள் தங்கள் பண பாதுகாப்பு குறித்து அச்சப்பட தேவையில்லை என்றார். அதற்கேற்ப கடந்த சில தினங்களாக படிப்படியாக ஏடிஎம்கள் சீரடைந்து வருகின்றன.
இணையதள வங்கி சேவை
ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல் பரவி வருவதால், இணையதள வங்கி சேவையை பயன்படுத்துவதை கூடுமானவரையில் குறைத்துக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன.