பொட்டுக்கு வரி விலக்கு இருக்கும்போது சானிட்டரி நாப்கினுக்கு ஏன் ஜிஎஸ்டி? டெல்லி ஹைகோர்ட் கேள்வி
டெல்லி: குங்கும் மற்றும் பொட்டுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு உள்ளபோது சானிட்டரி நாப்கின்னுக்கு ஏன் வரி விதிக்கப்படுகிறது என்று டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிக்கும், ஜர்மினா இஸ்ரார் கான் என்பவர் சானிட்டரி நாப்கின் மீதான 12 சதவீத ஜிஎஸ்டி வரியை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது கோர்ட் இவ்வாறு மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது.
இந்த வழக்கை டெல்லி ஹைகோர்ட் தலைமை நீதிபதி கீதா மிட்டல் மற்றும் ஹரிசங்கர் அமர்வு விசாரித்து வருகிறது. குங்குமம், பொட்டு, காஜல் அலங்கார பொருளுக்கு ஜிஎஸ்டி விலக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், சானிட்டரி நாப்கினுக்கு வரி விதிக்கப்பட்டதன் அவசியம் என்ன என்பதை அரசு விளக்க வேண்டும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அரசு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், சானிட்டரி நாப்கின் மீதான வரியை முழுவதுமாக தள்ளுபடி செய்தால் அதை உற்பத்தி செய்யும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் இன்புட் வரி சலுகையை இழக்க வேண்டி வரும். அதேநேரம் இறக்குமதி செய்யப்படும் நிறுவனங்களுக்கே அது லாபமாக முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சானிட்டரி நாப்கின் என்பது அத்தியாவசியம் என்பதால் அதிலிருந்து விலக்கு அளிக்க மனுதாரர் கோரிக்கைவிடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.