கொலீஜியம் முறையை மேம்படுத்துவது குறித்த வழக்கில் தற்போதைய நடைமுறையே தொடரும் - உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: நீதிபதிகளை நியமனம் செய்வது தொடர்பான விவகாரத்தில், கொலீஜியம் முறையை மேம்படுத்துவது குறித்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை தற்போதைய நடைமுறையே தொடரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததோடு, தற்போதைய கொலிஜியம் முறைப்படியே தலைமை நீதிபதிகளை தேர்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, கொலீஜியம் முறையை மேம்படுத்துவதற்காக நீதிபதிகளை 'நியமிக்கும் நடைமுறைகள்' குறித்த வரைவை தயாரிக்குமாறு நேற்று மத்திய அரசை கேட்டுக் கொண்டது.
இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டானி ஜெனரல் முகுல் ரோகத்கி, நீதிபதிகள் நியமனம் தொடர்பாக 'நியமிக்கும் நடைமுறைகள்' குறித்த எந்த வரைவையும் அரசு தயாரிக்காது என்றார். மேலும், இம்முயற்சியை கைவிட்டு விட்டு, கொலிஜியம் முறையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுக்க உச்ச நீதிமன்றம் முன்வரவேண்டும் என்றார்.
கொலீஜியம் முறையை மேம்படுத்துவதற்காக ஆலோசனைகள் மீதான வாதம் இன்று முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பினை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அதுவரை, தீர்ப்பு வெளியாகும் வரை தற்போதைய கொலீஜியம் முறை மூலமே நீதிபதிகளை தேர்வு செய்யலாம் என்றும் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications