வரலாற்றில் முதல் முறை.. கபினி அணையில் திறக்கப்பட்ட தண்ணீரால் மைசூர்-ஊட்டி சாலையில் வெள்ளம்
Recommended Video
மைசூர்: கபினி அணையில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் மைசூர்-நஞ்சன்கூடு தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
1974ம் ஆண்டு கபினி அணை திறக்கப்பட்ட பிறகு, அதன் வரலாற்றில் இரண்டாவது முறையாக, வினாடிக்கு 80,000 கன அடி நீர் நேற்று திறக்கப்பட்டது. இதற்கு முன்பு 1992ம் ஆண்டு காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தால், கபினி அணையில் இருந்து 76,000 கன அடி நீர் திறக்கப்பட்டதுதான் அதிகப்படியான நீர் அளவாகும். நேற்று திறக்கப்பட்ட சாதனை நீர் அளவால், ஆற்று வெள்ளம், மைசூர்-நஞ்சன்கூடு தேசிய நெடுஞ்சாலையில் (முன்பு எண் 212 இப்போது 766) புகுந்துவிட்டது.
மைசூரில் இருந்து ஊட்டி, அல்லது கேரளாவின் கோழிக்கோடு செல்லும் வழியில், நஞ்சன்கூடு அதற்கு அடுத்தபடியாக குண்டல்பேட்டை நகரங்கள் உள்ளன. குண்டல்பேட்டை வரை ஊட்டி, கோழிக்கோடு நகரங்களுக்கான வாகனங்கள் ஒரே சாலையில் செல்லும். குண்டல்பேட்டைக்கு பிறகு, ஊட்டி மற்றும் கோழிக்கோடு சாலைகள் தனித்தனியாக பிரிவடையும்.
ஆனால், மைசூருக்கும் நஞ்சன்கூட்டுக்கும் நடுவே சாலையில் வெள்ளம் சுமார் 5 அடி உயரத்திற்கு ஓடியதால், நேற்று மாலை முதல் மைசூரிலிருந்து, ஊட்டி, கோழிக்கோடு செல்லும் வாகனங்களும் வரும் வாகனங்களும் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.
மைசூர் மாவட்ட கலெக்டர் அபிராம் ஜி.சங்கர், போலீஸ் எஸ்.பி., அமித் சிங், தாசில்தார் தயானந்தா உள்ளிட்ட உயர் அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை மடைமாற்றம் செய்யும் பணிகளை முடுக்கி விட்டனர். தேசிய பேரிடர் மீட்பு படைக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
பெங்களூர், மைசூர் மக்கள் பலரும் வீக் என்ட்டில் காரில் ஊட்டிக்கு செல்வது வழக்கம். ஆனால், நேற்றைய வெள்ள பாதிப்பால், அவர்கள் பெரும் சிரமப்பட்டனர். இன்றைக்கு அங்கு நிலவரம் சீரடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.