கை நிறைய சாட்டிலைட்.. பாக்கெட் நிறைய துட்டு.. கலக்கப் போகுது இஸ்ரோ!
பெங்களூரு: 68 வெளிநாட்டு செயற்கைக் கோள்களை ஏவும் ஆர்டர் இஸ்ரோவுக்குக் கிடைத்துள்ளதாம். விண்வெளித் தொழில்நுட்பத்தில் இஸ்ரோ தற்போது ராஜ பாட்டையில் நடை போட ஆரம்பித்துள்ளது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணமாகும்.
தற்போது கிடைத்துள்ள 68 செயற்கைக் கோள்களில் 12 செயற்கைக் கோள்கள் அமெரிக்காவைச் சேர்ந்ததாகும் என்பது முக்கியமானது. இதுகுறித்து இஸ்ரோவின் வர்த்தக பிரிவான ஆண்டிரிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராகேஷ் சசிபூஷன் கூறுகையில், புதிதாக நமக்கு 68 செயற்கைக் கோள்களை ஏவும் ஆர்டர் கிடைத்துள்ளது. இதில் 12 செயற்கைக் கோள்களை அமெரிக்காவைச் சேர்ந்த வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான பிளானட்டிக் விண்ணில் செலுத்த நம்மை அணுகியுள்ளது.
இஸ்ரோ கடந்த 15 ஆண்டுகளில் இதுவரை 74 வெளிநாட்டு செயற்கைக் கோள்களை தனது செயற்கைக் கோள்கள் மூலம் விண்ணில் செலுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெல்ஜியம், பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் செயற்கைக் கோள்களையும் நாம் செலுத்தியுள்ளோம் என்பது முக்கியமானது.
இந்தியாவின் பிஎஸ்எல்வி மூலமாக இந்த செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. அடுத்த பத்து ஆண்டுகளில் உலக அளவில் 2500 செயற்கைக் கோள்கள் வரை செலுத்தப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.