உங்க குப்பையை இங்க கொண்டு வந்து கொட்டுங்க.. காசு கொடுத்து குப்பை வாங்கும் இந்தியா!
டெல்லி: உலக நாடுகளின் மின்னணுக் கழிவு உள்ளிட்ட குப்பைகளை காசு கொடுத்து விலைக்கு வாங்கி, இந்தியத் தொழிலதிபர்கள் லாபம் பார்த்து வருவதன் மூலம் இந்தியா மிகப்பெரிய குப்பைத் தொட்டியாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து, அப்போது ஏற்பட்ட கட்டிடக் குப்பைகள் மற்றும் நச்சுக் கழிவுகள் அனைத்தும் பிரொஸ்னா, ஷென்குவான் ஹை, பின்டோஸ் என்ற பெயருடைய மூன்று கப்பல்கள் மூலம் இந்தியாவிற்கு, அதுவும் சென்னைக்கு வந்தன.
இந்த குப்பையில் அஸ்பெஸ்டாஸ், காட்மியம், பாதரசம், டையாக்ஸின், பாலி குளோரினேடட் பைபினல்ஸ் ஆகிய பொருட்கள் இருந்துள்ளன.
குப்பைத் தொட்டி...
இது ஒரு உதாரணம் தான். ஆனால், வெளி உலகிற்குத் தெரியாமல் இது போன்று பல்வேறு வெளிநாட்டுக் குப்பைகள் இந்தியாவிற்கு வந்தவண்ணம் உள்ளன. சுற்றுச்சூழலைக் குறித்துக் கவலைப்படாத இந்திய தொழிலதிபர்கள் சிலரின் பேராசையால் இந்தியா இவ்வாறு குப்பை மேடாக மாறி வருகிறது என்கிறது ஆய்வுகள்.
மின்னணுக் கழிவுகள்...
அதிலும் குறிப்பாக உலகநாடுகளுக்கு மின்னணுக் கழிவுகளை அகற்றுவது தான் மிகப்பெரிய சவாலாக உள்ளது. காரணம் மற்ற கழிவுகளைப் போல், அவற்றை அப்படியே குப்பையில் போட்டுவிட முடியாது. அவற்றிலுள்ள நச்ச்சுப் பொருட்களை நீக்கிய பின் தான், அவற்றை குப்பையில் போட முடியும். ஆனால், இந்த நச்சை நீக்குவதற்கு நிறைய பணம் செலவாகும்.
செலவு குறைவு...
ஆனால், அதற்கு பதில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அந்தப் பொருட்களை அனுப்பி வைப்பதன் மூலம், செலவுகளை குறைக்க முடியும். இதனால் மற்றநாடுகளுக்கு 90 சதவீத லாபம் கிடைக்கிறது.
லாபம் அதிகம்...
ஆனால், இந்திய தொழிலதிபர்களும் இந்த மின்னணுக் கழிவை லாபம் இல்லாமல் வாங்குவது இல்லை. ரூ. 20 ஆயிரம் விலை கொடுத்து வாங்கும் ஒரு டன் மின்னணுக் கழிவில் இருந்து, 10 கிராம் தங்கம், 30 முதல் 40 கிலோ செம்பு, அலுமினியம், கொஞ்சம் வெள்ளி, சில நேரங்களில் பிளாட்டினம் ஆகியவையும் கிடைக்கின்றன. இதனால் ஒரு டன் குப்பையில் 40 ஆயிரம் ரூபாய் லாபம் பார்க்க முடிகிறது.
50 ஆயிரம் டன்...
இதனாலேயே காசு கொடுத்து வெளிநாட்டு மின்னணுக் குப்பைகளை இந்திய தொழிலதிபர்கள் வாங்கி வருகின்றனர். இந்த வியாபாரத்தில் வெளிநாட்டுக்காரர்களுக்கும் லாபம், இந்திய தொழிலதிபர்களுக்கும் லாபம். இப்படியாக ஆண்டு ஒன்றிற்கு சுமார் 50 ஆயிரம் டன் மின்னணு கழிவுகளை மற்ற நாடுகளில் இருந்து இந்தியா வாங்கி வருகிறது.
புற்றுநோய் அபாயம்...
ஆனால், உண்மையாக இந்த வர்த்தகத்தில் பாதிக்கப்படுவது சுற்றுச்சூழலும், அடிநிலை ஊழியர்களும் தான். ஆம், இந்தக் குப்பைகளைப் பிரித்தெடுக்கும் வேலை செய்பவர்களுக்கு நச்சுப் பொருட்களால் புற்றுநோய், காச நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.