கிரிக்கெட் வாரியத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் பணியாளர்கள் பங்கேற்க தடை: சுப்ரீம் கோர்ட்
டெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் நீக்கப்பட்ட தலைவர் என்.சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பணியாளர்கள் செயல்பட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற 6வது ஐ.பிஎல். போட்டிகளில் வீரர்களும் அணி நிர்வாகிகளும் பிக்ஸிங்கில் ஈடுபட்டது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம், கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைவராக அதாவது ஐ.பிஎல். போட்டி காலத்தில் முன்னாள் இந்திய அணி கேப்டன் கவாஸ்கரை நியமித்து இன்று உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் நீக்கப்பட்ட என்.சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் அதன் சார்பு நிறுவனங்களின் பணியாளர்கள் எவருமே கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது என்றும் தடை விதித்துள்ளது. இதில் வீரர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பணியாளராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐ.பி.எல். போட்டிகளை நடத்தும் நிர்வாகக் குழுவின் சி.இ.ஓவாக இருக்கும் சுந்தர் ராமன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவர். அவர் அப்பொறுப்பில் நீடிப்பதா? இல்லையா? என்பதை ஐ.பி.எல். போட்டிகளுக்கான தலைவர் கவாஸ்கர் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.