ராணுவத் தளவாடங்கள் கொள்முதல்: 'புரோக்கர்கள்', தடை செய்யப்பட்ட நிறுவனங்களுக்கும் அனுமதி!!
டெல்லி: ராணுவத்துக்கான தளவாடங்களை தடை செய்யப்பட்ட சில நிறுவனங்களிடம் வாங்குவதற்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்குவது குறித்தும் இதில் 'புரோக்கர்களை' அனுமதிப்பது குறித்தும் ஆலோசித்து வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ராணுவத்துக்கு தளவாடங்கள் வழங்கும் சில நிறுவனங்கள், முறைகேடுகளில் ஈடுபட்டதால் தடை செய்யப்பட்ட நிறுவனமாக கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. ராணுவத்துக்குத் தேவையான கனரக வாகனங்கள் கொள்முதல் செய்யும் போது, தாத்ரா யு.கே நிறுவனம் தன்னிடம் பேரம் பேசியதாக, அப்போதைய ராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு, ராணுவ தளவாட கொள்முதல் நடவடிக்கைகளில் ஈடுபட கடந்த 2012-ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரிடம், கருப்புப் பட்டியலில் உள்ள நிறுவனங்கள் மீதான தடையை விலக்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், தாத்ரா நிறுவனத்தின் பெயரில் 3 அல்லது 4 கனரக வாகன உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. தாத்ரா யு.கே. என்ற நிறுவனம் தடை செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட வாகனங்களுக்குத் தேவையான உதிரிப் பாகங்களை "பாரத் எர்த் மூவர்ஸ்' பொதுத் துறை நிறுவனம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ராணுவத் தளவாடக் கொள்முதலில் தடை செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
புதிய ராணுவ தளவாடக் கொள்முதல் கொள்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 10 நாட்களுக்குள் அதன் இறுதி வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அமைச்சரவையின் அனுமதிக்கு வைக்கப்படும்.
தளவாடக் கொள்முதலில் 'புரோக்கர்களுக்கு' அனுமதி அளிக்கப்படும். ஆனால் அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படமாட்டாது. ராணுவத்துக்கான சாதனங்களை தயார் செய்யும் பொதுத் துறை நிறுவனங்களின் உற்பத்தி அளவு 2016-இல் 40 சதவீதம் அதிகரிக்கப்படும். மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் எல்லைப் பகுதி சாலைகள் அமைப்பு (பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேஷன்) பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என்றார்.