காற்றாலை மின் உற்பத்தியை பெருக்க இந்தியா ஆர்வம்
டெல்லி: காற்றாலை மின் உற்பத்தியை பெருக்க புதிய அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால் வருங்காலங்களில் நிறைய காற்றாடிகளை நெடுஞ்சாலை ஓரங்களில் பார்க்க முடியும்.
இந்தியாவில் தற்போது 82 சதவீத மின் உற்பத்தி நிலக்கரியை வைத்து, அனல் மின் நிலையங்களில் தயாராகிவருகிறது. ஆனால் மரபுசாரா மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தாண்டின் தொடக்கத்தில் இந்தியா தனது மொத்த மின்சார உற்பத்தியில் 12 சதவீதத்தை மரபு சாரா எரிசக்தி மூலமாக பெற்றது.
மரபுசாரா எரிசக்தியை மட்டும் எடுத்து பார்த்தால், அதில் 66 சதவீதம் பங்கு காற்றாலைகளுக்கு செல்கிறது. இதை அதிகப்படுத்த தேசிய காற்றாலை மிஷன் திட்டத்தை இந்திய அரசு கையிலெடுத்துள்ளது.
தற்போது நிலக்கரி மூலமாக இந்தியாவில் 145 ஜிகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. நீர்மின் நிலையங்கள் இதற்கு அடுத்த இடத்தில் உள்ளன. அதன் மூலமாக 40.5 ஜிகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. எரிவாயு மூலமாக 21.8 ஜிகாவாட், காற்றாலை மூலமாக 21.1 ஜிகாவாட், அனுமின் நிலையங்கள் வாயிலாக 4.8 ஜிகாவாட், சூரிய மின் சக்தி மூலமாக 2.6 ஜிகாவாட், பிற மூலங்கள் வழியாக 7.9 ஜிகாவாட் மின்சாரம் கிடைக்கிறது.