என்.எஸ்.ஜி.யில் இந்தியாவை சேர்ப்பது பாகிஸ்தானை சீண்டுவதாம்... சொல்கிறது சீனா
டெல்லி: அணுசக்தி மூலப்பொருள்கள் விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்.எஸ்.ஜி) இந்தியா உறுப்பினரால் தெற்காசியாவின் அமைதி சீர்குலையும்; இது பாகிஸ்தானை சீண்டுவதாகும் என்று சீனா ஊடகம் கவலை தெரிவித்துள்ளது.
48 நாடுகளை கொண்ட என்.எஸ்.ஜி.யில் இந்தியாவும் உறுப்பினராவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீனா, துருக்கி ஆகிய நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்தியாவை சேர்த்தால் எங்களையும் சேர்க்க வேண்டும் என்று பாகிஸ்தான் பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சீனா அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் ஏட்டில் என்.எஸ்.ஜி.யில் இந்தியா சேருவது தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரை:
அமெரிக்காவுடன் இந்தியா
பிரதமர் மோடியின் அண்மைய அமெரிக்கா பயணத்தின் போது இந்தியாவின் 6 அணு உலைகளை அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. இப்படி அணுசக்தி தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்குவதால் சீனாவுக்கு அது ஆபத்தை ஏற்படுத்தும்.
அமெரிக்காவின் ஆசியா-பசிபிக் கொள்கையில் இந்தியாவும் இணைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் ஆதரவுடன் என்.எஸ்.ஜி.யில் உறுப்பினராக இந்தியா முயற்சிக்கிறது. அப்படி உறுப்பினரானால் தம்முடைய அணுசக்தி தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு அமெரிக்கா விற்பனை செய்யக் கூடும்.
பாகிஸ்தானை சீண்டுவது...
இந்தியா, பாகிஸ்தான் இருநாடுகளும் ஏற்கனவே அணுசக்தி வல்லமை கொண்டவை. இந்த நிலையில் என்.எஸ்.ஜி.யில் இந்தியா உறுப்பினராவது என்பது பாகிஸ்தானை சீண்டுவதைத் தவிர எதுவும் இல்லை.
இது இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போட்டியை உருவாக்கிவிடும். சீனாவின் தேசநலன்களையும் சீர்குலைத்துவிடும்.
சீனா எதிர்ப்பு ஏன்?
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள்தான் என்.எஸ்.ஜியில் உறுப்பினராக முடியும். ஆனால் இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பதை சீனா சுட்டிக்காட்டியது. இதை புரிந்து கொள்ளாமல் இந்திய ஊடகங்கள் சீனா முட்டுக்கட்டை போடுவதாக பதிவு செய்தியிருக்கின்றன.
தெற்காசிய அமைதிக்கு ஆபத்து
தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பது சீனாவின் நிலைப்பாடு. ஆனால் என்.எஸ்.ஜி.யில் இந்தியா உறுப்பினராவதன் மூலம் இந்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பு என்பது கவலைதரக் கூடியதாகிவிடும்.
இவ்வாறு குளோபல் டைம்ஸ் பத்திரிகை கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது.