இந்தியாவின் "நிர்பய்" ஏவுகணை சோதனை வெற்றி -டிஆர்டிஓ அறிவிப்பு
- டாக்டர் எம். அனந்தகிருஷ்ணன்
சந்திப்பூர், ஒடிஷா: அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லக் கூடிய திறன் படைத்த இந்தியாவின் நிர்பய் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன், பெங்களூரில் உள்ள ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் எஸ்டாப்ளிஷ்மென்ட் (ஏடிஇ) நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது நிர்பய்.
இன்று காலை 10.04 மணிக்கு ஒடிஷாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுதளத்திலிருந்து நிர்பய் ஏவி பரிசோதிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்தில் சோதனை முடிந்தது. இந்த சோதனையில் எதிர்பார்க்கப்பட்ட அனைத்து விஷயங்களும் சரியான முறையில் சாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனால் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது.
தொடக்க கட்ட தகவல்களின்படி, ஏவுகணையானது, மொத்தம் 850 கிலோமீட்டர் தொலைவுக்குப் பயணித்துள்ளது. குறிப்பிட்ட பாதையில் சரியாக அது பயணித்துள்ளது. மேலும் இலக்கையும் அது சரியாக தாக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து சோதனை வெற்றி என்று டிஆர்டிஓ தலைவர் டாக்டர் அவினாஷ் சந்தர் அறிவித்தார்.
அதன் பின்னர் ஒன்இந்தியாவிடம் அவர் பேசியபோது, நாம் சாதித்து விட்டோம். இது டிஆர்டிஓவுக்கு மாபெரும் நாள். இந்தியாவின் ஏவுகணை விஞ்ஞானிகளுக்கு இது மகிழ்ச்சியான நாள். இப்போது இதே போன்ற மேலும் பல சிறந்த ஏவுகணைகளை நம்மால் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இது நமது பாதுகாப்புப் படையினருக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுக்கும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் அவினாஷ் சந்தர்.
பெங்களூர் ஏடிஇ இயக்குநர் பி. ஸ்ரீகுமார் கூறுகையில், இந்த ஏவுகணைத் திட்டத்தில் நாம் இரு முக்கியமான தொழில்நுட்ப சவாலை சந்தித்தோம். ஆனால் அதிலிருந்து நாம் வெற்றி பெற்றுள்ளோம். இதன் மூலம் நிர்பய் போல மேலும் பல அதி நவீன ஏவுகணைகளை உருவாக்கும் திறன் நமக்கு கை கூடியுள்ளது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், நமது ஆய்வகத்தில் உள்ள அனைத்து டிசைனர்களுமே இளைஞர்கள். அவர்களது நம்பிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. நிர்பய் அவர்களை மேலும் நம்பிக்கைக்குரியவர்களாக மாற்றியுள்ளது. நமது திறமையை மிகச் சரியான முறையில் நாம் பயன்படுத்தியுள்ளோம். இந்தத் திட்டத்திற்காக டிஆர்டிஓவின் 12 ஆய்வகங்கள் இணைந்து செயல்பட்டன என்றார்.
நிர்பய் வெற்றியை, பெங்களூர் ஏடிஇ மையத்தில் உள்ள விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களும் உற்சாகத்துடன் வரவேற்றனர். இதுகுறித்து ஏடிஇ இயக்குநருக்கான தொழில்நுட்ப பணியாளர் அதிகாரி மகாலிங்கம் கூறுகையில், இது இந்தியாவுக்கு மாபெரும் தினமாகும். டிஆர்டிஓ மற்றும் ஏடிஇக்கு இது மாபெரும் தினம். நிர்பய் குழுவினரின் வருகைக்காக காத்திருக்கிறோம். கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் கடுமையாக உழைத்தார்கள். அதற்குரிய பலன் கிடைத்துள்ளது என்றார் மகிழ்ச்சியுடன்.