பாகிஸ்தானை எதிர்கொள்ள இந்தியா தயார்.. ராணுவ வீரர்கள், டாக்டர்கள், நர்சுகள் விடுமுறை ரத்து
டெல்லி: பாகிஸ்தானின் பதிலடியை எதிர்கொள்ள தயாராகும் இந்தியா, ராணுவத்தினர் விடுமுறைகளை ரத்து செய்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் யூரி பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதில் கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் இன்று அதிகாலை பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதனால் நிலை குலைந்துள்ளது பாகிஸ்தான். பதிலடியாக இந்தியா மீது தாக்குதல் நடத்தாவிட்டால் உள்நாட்டில் மானம், மரியாதை போய்விடும் என்ற நெருக்கடியில் உள்ளது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் ஏதேனும் பதிலடிக்கு சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்த வாய்ப்புள்ளதாக கருதும் இந்தியா, அதற்கான ஆயத்தங்களை எடுத்து வருகிறது. குஜராத் முதல், காஷ்மீர் வரையிலான மேற்கு எல்லை பகுதி உஷார்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு கமாண்டன்ட் பிரிவில் பணியாற்றும், அனைத்து ராணுவ வீரர்களுக்கும் விடுமுறையை ரத்து செய்துள்ளது ராணுவ தலைமை.
அதேபோல எல்லைப்புற மாவட்டங்களிலுள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகளின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. உடனடியாக பணிக்கு திரும்ப அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.