ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!
இந்திய- பாகிஸ்தான் எல்லைக்கோடு அருகே இருநாட்டு வீரர்களும் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவைச் சேர்ந்த 6 வீரர்கள் ஜம்முவில் உள்ள சீனாப் ஆற்றில் படகில் ரோந்து சென்றனர்.
அப்போது அவர்கள் சென்ற படகு திடீரென பழுதானது. அதேநேரத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக படகு கவிழ்ந்தது.
படகில் இருந்த 6 வீரர்களில் 5 பேர் ஆற்றில் குதித்து தப்பித்தனர். சத்யஷீல் யாதவ் என்ற வீரர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
பாகிஸ்தான் பகுதிக்குள் சென்ற அந்த வீரரை, பாகிஸ்தான் ரேஞ்சர் படை வீரர்கள் காப்பாற்றி கைது செய்தனர். அந்த வீரரிடம் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பின்னர் இந்தியாவிடம் வீரரை ஒப்படைத்துவிடுவதாக பாகிஸ்தான் அறிவித்தது. அதன்படி இன்று மாலை 3 மணியளவில் ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா எல்லைப் பகுதிக்கு சத்யஷீல் யாதவை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அழைத்து வந்தனர்.
அதன் பின்னர் இருதரப்பு கமாண்டோக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் சத்யஷீல் யாதவ், இந்திய அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டார்.
தாம் விடுவிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சத்யஷீல் யாதவ், பாகிஸ்தான் படையினர் தம்மை நல்ல முறையில் நடத்தினர் என்றார்.