இந்தியாவின் அன்றைய முள்ளிவாய்க்கால்- ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்- ரத்த வெள்ளத்தில் மிதந்த பொற்கோவில்!
பஞ்சாப் பொற்கோவிலுக்குள் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை முற்றாக அழிக்க மேற்கொண்டதுதான் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்.
Recommended Video
அமிர்தசரஸ்: பஞ்சாப் தனிநாடு கோரிய காலிஸ்தான் தீவிரவாதிகளை கூண்டோடு அழித்த ராணுவ நடவடிக்கைதான் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார். பிரதமராக இருந்த இந்திரா காந்தி, பஞ்சாப் பொற்கோவிலுக்குள் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை முற்றாக அழிக்க மேற்கொண்டதுதான் இந்த ராணுவ நடவடிக்கை.
சீக்கியர் தேசிய இனத்துக்கு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் 'காலிஸ்தான்' தனிநாடு கோரியது காலிஸ்தான் இயக்கம். 1980களில் ஆயுதமேந்திய இயக்கமாக உருவெடுத்தனர் காலிஸ்தான்கள்.
மத்திய அரசுக்கு பெரும் சவாலாக இருந்த காலிஸ்தான் இயக்கத்தை ஒடுக்க தீர்மானித்தார் பிரதமராக இருந்த இந்திரா காந்தி. 1984-ம் ஆண்டு மே 25-ந் தேதி 'ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்' பெயரில் ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் பஞ்சாப் மாநிலம் முழுவதும் குவிக்கப்பட்டனர். இதில் சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரஸ் பொற்கோவிலும் தப்பவில்லை.
ஆனால் பொற்கோவிலுக்குள் உள்ளே உடனே ராணுவத்தினர் நுழைந்துவிடவில்லை. 1984 ஜூன் 1-ந் தேதியன்றுதான் ராணுவத்தினரை பொற்கோவிலுக்குள் நுழைய உத்தரவிட்டார் இந்திரா காந்தி. அப்போது உள்ளே பதுங்கி இருந்த காலிஸ்தான் தீவிரவாதிகள் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து ராணுவம் பதிலடி கொடுத்தது. பின்னர் மெது மெதுவாக பொற்கோவிலுக்குள் உள்ளே நுழைந்த ராணுவம் தீவிரவாதிகளை வேட்டையாடியது. ஒரு வார காலம் அதாவது 1984 ஜூன் 8-ந் தேதி வரை இந்த ராணுவ நடவடிக்கை நீடித்தது.
காலிஸ்தான் தீவிரவாத இயக்கத் தலைவர் பிந்தரன் வாலேவை அழிக்க வேண்டும் என்ற முனைப்பில்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அன்று அமிர்தசரஸ் பொற்கோவில் ரத்த வெள்ளத்தில்தான் மிதந்தது. காலிஸ்தான் தீவிரவாதிகளும் பொதுமக்களுமாக 1592 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது அப்பட்டமான இனப்படுகொலை என்பதுதான் சீக்கியர்களின் கருத்து.
இந்த ராணுவ நடவடிக்கையானது காலிஸ்தான் தனிநாடு கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்திராவின் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கைக்கு எதிராக உலகம் முழுவதும் சீக்கியர்கள் கொந்தளித்து போராடினர். நம் நாட்டிலும் ராணுவத்திலும் அரசு உயர் பதவிகளில் இருந்தும் ஏராளமான சீக்கியர்கள் ராஜினாமா செய்தனர்.
இந்த நடவடிக்கையின் விளைவாக 4 மாதங்களில் சீக்கிய பாதுகாவலர்களால் இந்திரா காந்தி சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட துயரமும் நடந்தது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கியர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதில் 3,000 சீக்கியர்கள் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்டனர்.
ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையால் அன்று பஞ்சாப் பொற்கோவிலானது 2009-ம் ஆண்டு ஈழத்து முள்ளிவாய்க்காலாகத்தான் இருந்தது என்பது வரலாறு.