விலகும் அதிகாரிகள்.. திறமையாளர்களை தக்க வைக்க 'டபுள் டிஜிட்' ஊதிய உயர்வுக்கு இன்போசிஸ் திட்டம்!
பெங்களூர்: அடுத்தடுத்து உயர் மட்ட அளவில் பலரும் வெளியேறி வருவதாலும், ஊழியர்கள் வெளியேறுவது அதிகரித்து வருவதாலும், பெரிய அளவில் சம்பள உயர்வைக் கொடுத்து அனைவரையும் தக்க வைக்கும் நடவடிக்கைகளில் இன்போசிஸ் இறங்கியுள்ளதாம்.
தற்போதுள்ள 1.5 லட்சம் ஊழியர்களுக்கும் இரட்டை இலக்கத்தில் சம்பள உயர்வை அளிக்கவும் இன்போசிஸ் நிறுவனர் -தலைவர் என்.ஆர். நாராயண மூர்த்தி தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
இந்தத் தகவல்கள் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றுவோர் மூலம் வெளியாகியுள்ளது.
வளர்ச்சி இருக்கிறது.. ஆனால் ராஜினாமாவும் தொடர்கிறது
இன்போசிஸ் நிறுவனத்தில் வளர்ச்சி இருக்கிறது என்றாலும் கூட பலர் வெளியேறுவது தொடர் கதையாகியுள்ளது. இது இன்போசிஸ் நிர்வாகத்தைக் கவலைக்குள்ளாக்கியுள்ளதாம்.
மூத்த அதிகாரிகள் பலர் விலகல்
பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறி விட்டனர். இதனால் இருக்கும் ஊழியர்களையும் தக்க வைத்துக் கொள்ள அவர்களுக்கு நல்ல சம்பள உயர்வைத் தர வேண்டிய கட்டாயம் இன்போசிஸ் நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது.
பதவி உயர்வும் வருகிறது
ஊதிய உயர்வை மட்டும் கொடுக்காமல் பதவி உயர்வுகளையும் சேர்த்துக் கொடுத்து ஊழியர்களைக் குஷிப்படுத்தவும் இன்போசிஸ் நிர்வாகம் முயலுகிறதாம்.
8 முதல் 12 சதவீத ஊதிய உயர்வு
ஊதிய உயர்வானது 8 முதல் 12 சதவீதத்திற்குள் இருக்கும் என்று தெரிகிறது. வழக்கமாக ஜூன் மாதம்தான் தனது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அளிக்கும் இன்போசிஸ். இந்த முறையும் அதேபோல வருகிற ஜூன் மாதம் ஊதிய உயர்வு இருக்கும் என்று தெரிகிறது.
வெளியேறுவதில் இன்போசிஸ் நம்பர் 1
இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலேயே அதிக அளவில் ஊழியர்கள் வெளியேறும் நிறுவனமாக இன்போசிஸ் உருவெடுத்துள்ளது. எதிர் நிறுவனங்கள் பலர் இன்போசிஸ் ஊழியர்களை வலை வீசாத குறையாக அள்ளிக் கொண்டு போவதும் அதிகரித்துள்ளதாம். கடந்த செப்டம்பருடன் முடிந்த காலாண்டின் இறுதியில் கிட்டத்தட்ட 17.3 சதவீத ஊழியர்கள் இன்போசிஸ் நிறுவனத்தில் குறைந்துள்ளனர்.
டிசிஎஸ் பரவாயில்லை
டிசிஎஸ் எனப்படும் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் ஊழியர்கள் குறைவானது 10.9 சதவீதமாக இருந்தது. இத்தனைக்கும் இங்கு 5 முதல் 10 சதவீத ஊதிய உயர்வே அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.