இந்திய குத்துச்சண்டை சங்கம் மீதான தடையை நீக்க சர்வதேச சம்மேளனம் மறுப்பு
டெல்லி: இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நிர்வாகக் குளறுபடி, தேர்தல் முறைகேடு ஆகிய காரணங்களால் இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் கடந்த ஆண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டது. மேலும் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டால், குத்துச்சண்டை சம்மேளனத்துக்கான சஸ்பெண்ட் குறித்து பரிசீலனை செய்யப்படும் எனவும் சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் முன்னர் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்திய குத்துச் சண்டை சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளை அங்கீகரிக்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளர் ராஜுவ் மேத்தா, சர்வதேச சம்மேளனத்துக்கு கடிதம் அனுப்பினார்.
இதைத் தொடர்ந்து சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய குத்துச்சண்டை சங்கத்தில் நிர்வாக குளறுபடி தொடர்ந்து நீடித்து வருவதாக தங்களுக்கு புகார் கிடைத்துள்ளது. மீண்டும் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்படும் வரை தடையை நீக்க முடியாது. பிரச்னை தீரும் வரை சர்வதேச குத்துச்சண்டை சம்மேளன கொடியின் கீழ், இந்திய வீரர்கள் போட்டிகளில் பங்கேற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.