சார்க் தலைவர்களுக்கான அழைப்பு- சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு: பிரதமர் மோடி
டெல்லி: தனது பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்தது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு மோடி முதல் முறையாக டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார். அங்கு கூடியிருந்த கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அவர் பேசியதாவது:
மக்கள் எனது அரசிடம் நிறைய எதிர்பார்க்கின்றனர். அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது எனது அரசின் கடமை. நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம். அதன் விளைவாக, இந்தியாவுக்கான மரியாதையையும் அந்தஸ்தையும் உலகம் அளிக்கும்.
எனது பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தேன். இதன் மூலம் ஒட்டுமொத்த உலகுக்கும் ஒரு தகவலை அளித்தோம். இது எப்படி நடந்தது என்று உலக நாடுகள் அதுகுறித்து இன்னமும் பேசி வருகின்றன.
சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட ஒரு சரியான முடிவு எவ்வளவு திறன்வாய்ந்ததாக இருக்கும் என்பதையே இது காட்டுகிறது. காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சி காரணமாக மக்கள் நீண்ட காலமாக அதிருப்தி அடைந்திருந்தனர். மாற்று அணி அனுபவமும் உரிய பயனளிக்கவில்லை.
இந்நிலையில், மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய கூடுதல் பொறுப்பு எனது அரசுக்கு இருக்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்களிடையே அலையும், பொதுவான சிந்தனையும் இருந்திருக்காவிட்டால் பாஜகவுக்கு லோக்சபாவில் இந்த அறுதிப் பெரும்பான்மை கிடைத்திருக்காது.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.