திரிபுரா: 'திப்ரலாந்து' தனி மாநிலம் கோரி போராட்டம் வெடித்தது!
திரிபுராவில் பழங்குடிகள் வாழும் பகுதியை திப்ரலாந்து தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அகர்தலா: தனி கூர்க்காலாந்து மாநிலம் கோரி மேற்கு வங்கத்தில் நடைபெறும் போராட்டம் வடகிழக்கு மாநிலங்களுக்கும் பரவி வருகிறது. திரிபுராவில் பழங்குடி மக்கள் தங்களது பகுதியை திப்ரலாந்து தனி மாநிலமாக அறிவிக்க கோரி போராட்டத்தில் குதித்துள்ளனர்.
டார்ஜிலிங்கில் மீண்டும் வெடித்தது கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கை போராட்டம். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இந்த போராட்டம் நீடிக்கிறது.

போடோலாந்து
இப்போராட்டத்தைத் தொடர்ந்து அஸ்ஸாமில் போடோலாந்து தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தி போராடப் போவதாக அந்த இயக்கத்தினர் அறிவித்தனர், தற்போது திரிபுராவிலும் போராட்டம் தொடங்கியுள்ளது.

திப்ரலாந்து
திரிபுரா மாநிலத்தின் மக்கள் தொகையில் கணிசமாக உள்ள பழங்குடி மக்கள் நீண்டகாலமாக திப்ரலாண்ட் தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். இதனால்தான் திரிபுரா பழங்குடி மக்கள் மாவட்ட தன்னாட்சி கவுன்சில் ஒன்று உருவாக்கப்பட்டது.

மீண்டும் போராட்டம்
தற்போது கூர்க்காலாந்து போராட்டம் வெடித்த நிலையில் எங்களுக்கும் திப்ரலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் மீண்டும் களமிறங்கியுள்ளனர் திரிபுரா பழங்குடி மக்கள். இம்மாநிலத்தின் பிரதான நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதைகளை காலவரையின்றி முடக்கப் போவதாகவும் போராட்ட குழுவினர் அறிவித்துள்ளனர்.

கட்சிகள் எதிர்ப்பு
இப்போராட்டத்தை ஆளும் இடதுசாரி அரசும் ஆதரிக்கவில்லை. மத்தியில் ஆளும் பாஜக அரசும் எதிர்ப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications