மதிய உணவு திட்டத்துக்கு ஆதார் எண் கட்டாயம்... சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறுகிறதா மத்திய அரசு?
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்துக்கு ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்பானது சுப்ரீம் கோர்ட்டின் விதிமுறையை மீறும் வகையில் உள்ளதாக தகவல்கள் வெளியா
டெல்லி: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்துக்கு ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறுவதாக உள்ளது.
பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தில் பயன்பெறும் குழந்தைகள் கட்டாயம் ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கடந்த சனிக்கிழமை அறிவித்தது.
மதிய உணவு திட்டத்தில் உள்ள மாணவர்கள் வரும் ஜூன் மாதம் 30-ஆம் தேதிக்குள் தங்களது ஆதார் எண்ணை அந்தந்த பள்ளிகளில் பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் அத்திட்டத்தில் பணியாற்றும் சமையலர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும் மேற்கண்ட விதி பொருந்தும்.
இந்த அறிவிப்பானது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறுவதாக உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு, ஆதார் எண் கட்டாயம் என்பது எல்லா விஷயங்களுக்கும் பொருந்தாது. அரசின் சலுகையை கிடைக்க தகுதியுடைய எந்த ஒரு குடிமகனும் ஆதார் எண் இல்லை என்ற காரணம் காட்டி அவர்களுக்கு அந்த சலுகைகள் வழங்காமல் இருக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் கடந்த 2015-ஆம் ஆண்டு, ஆதார் எண் திட்டமானது முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தின் பேரில் பெறுவதாக இருக்க வேண்டுமே தவிர அதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்யும் வரை கட்டாயமாக்க முடியாது என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.
எனினும் ஆதார் எண்கள் இருந்தாலும் அரசின் எந்த திட்டத்தையும் எளிதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுத்த ஏதுவாக இருக்கும் என்று அரசு வாதிட்டது. இந்நிலையில் இலவச மதிய உணவு திட்டத்துக்கு ஆதார் எண் கட்டாயம் என்று அரசு அறிவித்திருப்பது சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறும் செயலாக உள்ளதாக தெரிகிறது.