செவ்வாய் கிரகத்தை 100 நாளில் மங்கள்யான் அடையும்: இஸ்ரோ அறிவிப்பு!
பெங்களூர்: இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் தன்னுடைய இலக்கை இன்னும் 100 நாட்களில் எட்டிப்பிடிக்க உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி அன்று மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரக ஆய்விற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் செலுத்தப்பட்டது.
கடந்த 7 மாதங்களாக தனது சுற்றுப்பாதையில் பறந்து செவ்வாய் கிரகத்தை நோக்கி முன்னேறும் மங்கள்யான், கிட்டதட்ட 70 சதவிகித தூரத்தை வெற்றிகரமாக கடந்து விட்டது.
மீதமுள்ள 30 சதவிகித தூரத்தையும் இன்னும் 100 நாட்களில் கடந்து இலக்கை அடைய உள்ளது மங்கள்யான்.அதாவது, வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி அன்று செவ்வாய் கிரகத்தை சென்றடையும்.
இதற்காக மங்கள்யானின் புதிய எஞ்சின்கள் இயக்கப்பட்டுள்ளன.இதனால் மங்கள்யானின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதே போல் ஆகஸ்டிலும் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது.
மங்கள்யான் தனது இலக்கை எட்டும் செப்டம்பர் 24 ஆம் தேதி செவ்வாய் கிரக ஆராய்ச்சித் திட்டத்தின் ஒரு முக்கிய தொழில்நுட்ப மைல் கல்லாக இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.