மகேஷ் ஷா பாணியில் சிக்கிய மும்பை தொழிலதிபர்.. ரூ. 2 லட்சம் கோடிக்கான ஆவணங்களை ஏற்க ஐடி மறுப்பு
குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷாவைத் தொடர்ந்து, மும்பை தொழிலதிபர் ஒருவர் தவறான ஆவணங்கள் அளித்து வருமான வரித்துறையினரிடம் சிக்கியுள்ளார்.
மும்பை: மும்பை தொழிலதிபர் தாக்கல் செய்த ரூ.2 லட்சம் கோடிக்கான வருமான வரி கணக்கு போலியானது, எனவே அதனை ஏற்க முடியாது என வருமான வரித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மகேஷ் ஷா. ஆமதாபாத்தில் ரியல் எஸ்டேட் செய்து வந்த மகேஷ் ஷா, ரூ. 13 ஆயிரம் கோடி கறுப்புப் பணம் வைத்திருந்ததாக நேற்று கைது செய்யப்பட்டார்.
ஆனால், "கமிஷன் வாங்கிக் கொண்டு தான் பணத்தை மாற்றிக் கொடுத்ததாகவும், தன்னிடம் உள்ள அனைத்து பணமும் முக்கிய அரசியல்வாதிகளுடையது" என பகிரங்கமாக குற்றம் சாட்டினார் மகேஷ் ஷா. இதுகுறித்து வருமான வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், மகேஷ் ஷாவின் வருமான வரி ஆவணங்களை ஏற்க மறுத்தது போலவே, மும்பையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் ஆவணங்களையும் ஏற்க மறுத்துள்ளது வருமான வரித்துறை.
மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பையின் பாந்த்ரா பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அப்துல் ரசாக் முகமது சையத். இவர் தனது பெயரில் மட்டுமல்லாது, தனது மனைவி, மகன் மற்றும் சகோதரியின் பெயரால் இந்த ரூ. 2 லட்சம் கோடிக்கான ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளார்.
இவர்களில் மூவருடைய பான் கார்டு அஜ்மீர் முகவரியில் உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் தான் இதனை அவர்கள் மும்பைக்கு மாற்றியுள்ளனர் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்தே இவர்களது வருமான வரித்தாக்கல் ஆவணங்களைப் போலியானது என அதிகாரிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.
இது தொடர்பாக வருமான வரித்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த தவறான ஆவண சமர்ப்பிப்பு விவகாரங்கள் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.