தேர்தலுக்கு முந்தையநாள் காங்கிரசுக்கு ஷாக் கொடுத்த ஷெரீப்- கட்சியை விட்டு விலகல்
பெங்களூர்: கர்நாடகாவில் மக்களவை தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ரயில்வே அமைச்சருமான ஜாபர் ஷெரீப் நேற்று காங்கிரசிலிருந்து விலகினார்.
கர்நாடகாவின் முன்னணி காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜாபர் ஷெரீப்அக்கட்சி சார்பில் 8 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். 19991-95ம் ஆண்டுகளுக்கிடையே மத்திய ரயில்வே அமைச்சராக பதவி வகித்தவர். மக்களவை தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் இருந்து போட்டியிட ஷெரீப் விரும்பினார்.
ஆனால் அவருக்கு டிக்கெட் வழங்குவதற்கு மறுத்த காங்கிரஸ் மேலிடம், கர்நாடக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரிஸ்வான் அர்ஷத்துக்கு டிக்கெட் அளித்தது. இதனால் அதிருப்தியடைந்த ஷெரீப் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாமல் மெக்காவுக்கு புனித யாத்திரை சென்றார். யாத்திரையை முடித்து கர்நாடகா திரும்பிய பிறகும் பிரசார களத்தில் அவரை பார்க்க முடியவில்லை.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஷெரீப், காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும், தனது முடிவுக்கு சோனியா காந்திதான் காரணம் என்றும் தெரிவித்தார்.
கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரசுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் ஷெரீப்பின் முடிவு அமைந்துள்ளது.
முன்னதாக ஷெரீப்பை தனது கட்சியில் சேருமாறும், மைசூர் தொகுதியில் போட்டியிடுமாறும் மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவ கெளடா கோரினார். ஆனால், அதையும் ஷெரீப் ஏற்கவில்லை.