ஜெயின் சமூகத்தினர் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறக்க சுப்ரீம் கோர்ட் தற்காலிக அனுமதி
டெல்லி: ஜெயின் சமூகத்தினர் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறக்கும் பாரம்பரியத்தை தற்போதைக்குத் தொடரலாம் என்று சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
சன்தாரா என்று அழைக்கப்படுகிறது இந்த வழக்கம். இதை ஜெயின் சமூகத்தினர் காலம் காலமாக கடைப்பிடித்து வருகின்றனர். ஆனால் கடந்த மாதம் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இதற்குத் தடை விதித்தது. இதுவும் ஒரு வகை தற்கொலைதான். எனவே இதை அனுமதிக்க முடியாது என்று அது கூறியிருந்தது. இதை சட்டவிரோதமானது என்றும் அது தீர்ப்பளித்திருந்தது.
இதையடுத்து ராஜஸ்தானிலும் நாடு முழுவதும் வசிக்கும் ஜெயின் சமூகத்தினர் மத்தியிலும் இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஜெயின் சமூகத்தினர் ஜெய்ப்பூரில் பல ஆயிரக்கணக்கில் கூடி எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஜெயின் சமூகத்தினர் இதை எதிர்த்து அமைதி வழியில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தற்கொலைதான் குற்றச் செயல். சந்தாரா மத சம்பிரதாயம் என்று அவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சிலர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மத வழிபாட்டுச் சுதந்திரத்தின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுவதால் இப்போதைக்கு இதைத் தொடரலாம் என்று கூறி அனுமதித்து வழக்கைத் தள்ளி வைத்தது.
ஜெயின் சமூகத்தில் மரணத்தைத் தழுவ ஒருவர் விரும்பினால் அன்ன ஆகாரம் இன்றி, தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் இருந்து உயிர் நீக்க அனுமதி உண்டு. இது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல ஆண்டு தோறும் பல நூறு பேர் மரணத்தைத் தழுவி வருவதாக கூறப்படுகிறது.