ஹைகோர்ட் தீர்ப்பை அசைக்கும் அப்பீல் மனு.. முழு வீச்சில் ஆச்சாரியா டீம்!
பெங்களூர்: உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக கர்நாடக அரசு மிகவும் வலிமையான மேல்முறையீட்டு மனுவை தயாரித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்ததை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு நேற்று முடிவு செய்து அறிவித்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து கடந்த மாதம் 11ம் தேதி கர்நாடக ஹைகோர்ட் உத்தரவிட்டிருந்த நிலையில், மேல்முறையீடு முடிவுக்கு கர்நாடகா வந்துள்ளது.
ஆச்சாரியா குழு
இந்த வழக்கில், ஹைகோர்ட்டில் அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட பி.வி.ஆச்சாரியாவை, சீனியர் கவுன்சல் என்ற முறையில், மேல்முறையீட்டின்போது ஆஜராகச் செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. அவரது தலைமையிலான வக்கீல்கள் குழு, வலுவான மேல்முறையீட்டு மனுவை தயார் செய்து வருகிறது. அதையும், துரித கதியில் தயாரித்து வருகிறது.
2 விஷயங்கள்
இந்த அப்பீலில் அதிரடியாக இரு விஷயங்கள் அடிப்படையாக காண்பிக்கபட உள்ளன என்று சட்டக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன. முதல் விஷயம், நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பிலுள்ள கணித பிழையாகும். அந்த கணித பிழையை திருத்தினால் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது போலாகிவிடும். எனவே, இந்த விவகாரம் முதல் மையப்பொருளாக வைக்கப்படுகிறது.
வழக்கில் சேர்க்கவில்லை
இரண்டாவது விஷயம், கர்நாடக தரப்பை, வழக்கில் இணைத்துக் கொள்ளாமலேயே ஹைகோர்ட் தனது விசாரணையை நடத்தி முடித்து தீர்ப்பையும் வழங்கியது தவறு என்பதாகும். குற்றம்சாட்டப்பட்ட தரப்புக்கு 2 மாத காலம் வாதிட அனுமதி கொடுத்த நீதிபதி, வழக்கை நடத்தும் கர்நாடக தரப்பை வாதிட அழைக்கவில்லை. முக்கியமான ஒரு வழக்கில், எதிர்தரப்பின் கருத்தை கூட கேட்கவில்லை.
ஒருநாள் மட்டுமே
சட்ட விரோதமாக அரசு வக்கீலாக ஆஜராகி வாதத்தை எடுத்து வைத்தார் பவானிசிங் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையிலும், அரசு தரப்புக்கு வாதிட கிடைத்தது 1 நாள் மட்டுமே. அதுவும், எழுத்துப்பூர்வமாக மட்டுமே. இந்த விவகாரத்தையும் தங்கள் அப்பீலில் முக்கிய விவகாரமாக்க உள்ளது அரசு தரப்பு என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.