வங்கப் புலிக்கு புதிய கவுரவம்... சிறப்பு ஸ்டாம்ப் வெளியிடப்பட்டுள்ளது
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஜூலான் கோஸ்வாமியை கவுரவிக்கும் வகையில் சிறப்பு ஸ்டாம்ப் வெளியிடப்பட்டுள்ளது.
கொல்கத்தா: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜூலான் கோஸ்வாமியை கவுரவிக்கும் வகையில், சிறப்பு ஸ்டாம்ப் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மிகவும் சீனியர். 35 வயதாகும் ஜூலான் கோஸ்வாமி. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்துள்ள அவர், மகளிர் ஒருதினக் கிரிக்கெட் போட்டியில், 200 விக்கெட்களை வீழத்திய முதல் வீராங்கனையாக உள்ளார். மிகச் சிறந்த ஆல்ரவுண்டரான அவருடைய இந்த சாதனையை கவுரவிக்கும் வகையில், சிறப்பு ஸ்டாம்ப் வெளியிடப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, அவரை வாழ்த்தினர்.
2002ம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாட துவங்கிய அவர், 10 டெஸ்ட் மற்றும், 169 ஒருதினப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்தாண்டு நடந்த மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணி பைனல்ஸ் வரை முன்னேறியதற்கு பெரிதும் உதவியவர் ஜூலான்.
2007ல் ஐசிசியின் சிறந்த பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற விருதை வென்றுள்ள அவர், 2010ல் அர்ஜூனா விருதையும், 2012ல் பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.