இறப்பதற்கு முன்பு சுனந்தா போன் செய்து பேசிய பத்திரிக்கையாளர்களை விசாரிக்கும் டெல்லி போலீஸ்
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் கொலை வழக்கில் சில பத்திரிக்கையாளர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று டெல்லி போலீஸ் கமிஷனர் பஸ்ஸி தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்டது குறித்து டெல்லி போலீசார் பலரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். திங்கட்கிழமை இரவு சசி தரூரிடம் போலீசார் 4 மணிநேரம் விசாரணை நடத்தினர். சுனந்தா இறப்பதற்கு முந்தைய நாள் சில பத்திரிக்கையாளர்களுக்கு போன் செய்து பேசியுள்ளார்.
இந்நிலையில் அந்த பத்திரிக்கையாளர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாக டெல்லி போலீஸ் கமிஷனர் பஸ்ஸி தெரிவித்துள்ளார்.
சுனந்தாவின் கொலை வழக்கை விசாரித்து வரும் சிறப்பு குழு அவர் பிணமாகக் கிடந்த டெல்லி லீலா பேலஸ் ஹோட்டல் ஊழியர்கள், தரூரின் பாதுகாவலர்கள், பணியாள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளது.
மேலும் தரூரிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். விசாரணையில் சுனந்தா கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது.