மெல்லிய கோடு.. இது இலவசம் அல்ல.. ‛ப்ரீ’ திட்டத்தை அறிவித்துவிட்டு பாஜக ஜேபி நட்டா சொன்னத பாருங்க!
சிம்லா: இமாச்சல பிரதேச தேர்தலில் இலவச திட்டங்களை பாஜக அறிவித்துள்ளது. இலவச திட்டங்களை எதிர்த்து வந்த நிலையில் இந்த திட்டங்கள் அறிவிப்பு பற்றி பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா விளக்கம் அளித்துள்ளார். நாங்கள் அறிவித்தது இலவச திட்டங்கள் இல்லை. இலவச திட்டங்ளுக்கும், மக்களுக்கு அதிகாரமளிக்கும் நலத்திட்டங்களுக்கும் இடையே சிறிய கோடு உள்ளது என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இமாச்சல பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ஜெய்ராம் தாகூர் உள்ளார். இந்நிலையில் தான் இமாச்சல பிரதேச மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்ட்டுள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 8 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
அட! அண்ணாமலையை புறக்கணிக்கலை.. இமாச்சல பிரதேச தேர்தலில் வானதி சீனிவாசன் சூறாவளி பிரசாரம்!
மும்முனை போட்டி
இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக முயன்று வருகிறது. பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோரின் சொந்தமாநிலம் இமாச்சல பிரதேசம் என்பதால் அவர்கள் இருவரும் பாஜகவை வெற்றி பெற வைக்க தீவிரமாக போராடி வருகின்றனர். அதேபோல் இழந்த ஆட்சியை மீட்டெடுக்க காங்கிரஸ் மும்முரமாக செயல்பட்டு வுருகிறது. மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மியும் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் களமிறங்கி உள்ளது.
பாஜக தேர்தல் வாக்குறுதிகள்
இந்நிலையில் தான் நேற்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டது. இதில் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும். மாதம் வீட்டுக்கு 300 யூனிட் மின்சாரம் வழங்கப்படும். ஒரு லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும். மாநிலத்தில் நடமாடும் மருந்தகங்கள் செயல்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. இதன் தொடர்ச்சியாக இன்று பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. ‛பாஜக சங்கல்ப் பாத்ரா2022' என் பெயரிலான தேர்தல் வாக்குறுதிகளை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா வெளியிட்டார். இதில் 11 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.3 ஆயிரம் நிதி
இந்த 11 அம்சங்களில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதன்படி மாநிலத்தில் பொதுசிவில் சட்டம் அமல்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் 8 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். பிரதம மந்திரி கிஷான் நிதி திட்டத்தின் கீழ் மாநில அரசு நிதி சேர்த்து கூடுதலாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். இதில் 10 லட்சம் விவசாயிகள் இணைக்கப்படுவார்கள்.
சைக்கிள்கள் வழங்கப்படும்
புதிதாக 5 மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்படும். ராணுவத்தில் உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகையும், திருமணமான பெண்களுக்கான ஊக்கத்தொகை அதிகரித்து வழங்கப்படும். ஆப்பிள்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதமாக குறைக்கப்படும். மாநில அரசு வேலைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படும். 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள், பெண் தொழில் முனைவோருக்கு வட்டியில்லா கடன் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இலவசங்களை எதிர்த்த பாஜக
பிரதமர் மோடி உள்பட அனைத்து மத்திய அமைச்சர்களும் தேர்தலில் இலவச திட்டங்கள் அறிவிப்பதை எதிர்த்தனர். குறிப்பாக பிரதமர் மோடி மேடைக்கு மேடை விமர்சனம் செய்தார். மேலும் பாஜகவின் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் இலவச திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்க கூடாது. இலவசங்கள் அறிவிக்க தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இதில் ஆம்ஆத்மி, திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களை எதிர்மனுதாரராக இணைத்து கொண்டன. இரு கட்சிகள் சார்பிலும், ‛‛மக்களை முன்னேற்றுவதற்காக இலவச திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இதில் எந்த தவறும் இல்லை'' என வாதிடப்பட்டது.
ஜேபி நட்டா விளக்கம்
இந்நிலையில் தான் தற்போது இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் இலவச திட்டங்கள் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அதுபற்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மக்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையிலான நலத்திட்டங்கள் அறிவிப்பதற்கும், ஓட்டுக்காக கவர்ச்சியான அறிவிப்புகள் வெளியிடுவதற்கும் இடையே ஒரு சிறிய கோடு உள்ளது. பெண்கள், விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது. இதுதான் பாஜகவுக்கான கடமையாக உள்ளது. ஒருவருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் செயல்பட்டால் அது கவர்ச்சிக்கு அறிவிப்பு செய்பவர்களுக்கு எதிரானது தான்'' என்றார்.