கள்ளக்குறிச்சி கலவரம்! போலீஸ் ஸ்டேஷன் பாத்ரூமில் வழுக்கி விழுந்து 4 பேருக்கு கை, கால் எலும்பு முறிவு
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தனியார் பள்ளியில் மாணவி மரண விவகாரத்தில் கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 278 பேரில் 4 பேர் பாத்ரூமில் விழுந்து கை, கால் முறிந்து மாவு கட்டு போடப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளி விடுதியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி உயிரிழந்தார். இவரது மரணத்திற்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் கலவரம் வெடித்தது.
Recommended Video
இதில் பள்ளியின் பேருந்து, வகுப்பறைகள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டது. பள்ளியில் பத்திரப்படுத்தப்பட்டிருந்த மாணவர்களின் சான்றிதழ்களும் கொளுத்தப்பட்டன.

15 பிரிவுகள்
இதையடுத்து கலவரக்காரர்கள் மீது போலீஸார் 15 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் முதல்கட்டமாக கலவரத்தில் ஈடுபட்டதாக பங்காரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துலிங்கம், தாவடிப்பட்டு ஏழுமலை, பெத்தானூர் பாபு, கரடிசித்தூர் வேல்முருகன், மண்மலை வெங்கடேஷ், விளம்பார் பாலு, பாண்டியங்குப்பம் பிரகாஷ், இந்திலி சத்தியமூர்த்தி, அம்மகளத்தூர் ஆனந்தன், எலவடி சின்னதம்பி, விருகாபூர் மணிகண்டன் உள்பட 128 பேர் கைது செய்யப்பட்டனர்.

20 பேர் சிறுவர்கள்
இதில் 20 பேர் சிறுவர்கள். இதைத் தொடர்ந்து 108 பேரையும் கள்ளக்குறிச்சி 2ஆவது நடுவர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அனைவரையும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நடுவர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) முகமது அலி உத்தரவிட்டார். இதையடுத்து இவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

278 பேர்
சிறுவர்கள் 20 பேர் கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து போலீஸார் இரண்டாவது கட்டமாக 2 சிறுவர்கள் உள்பட 150 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 278 பேருக்கும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அது போல் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

எலும்பு முறிவு
கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் காவல் நிலைய பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாகவும் அவர்களுக்கு கையில் மாவு கட்டு போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அது போல் ஒருவருக்கு காலிலும் கட்டு போடப்பட்டுள்ளது. இந்த கலவரம் தொடர்பாக போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். இதனால் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications