கர்நாடக முதல்வரின் மகளை யாராவது பலாத்காரம் செய்திருந்தால் கஷ்டம் தெரிந்திருக்கும்: பாஜக தலைவர்
பெங்களூரு: 'கர்நாடக முதல்வர், உள்துறை அமைச்சர் மகள்கள் பலாத்காரம் செய்யப்பட்டால்தான் அதன் வலி என்ன என்று அரசுக்கு தெரியும்' என இம்மாநில பாஜக தலைவர்களில் ஒருவரும், முன்னாள் துணை முதல்வருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்த கருத்து கட்சிவேறுபாடின்றி கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

பெங்களூரு உட்பட கர்நாடகா முழுவதுமே சமீப காலமாக பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதிலும் பள்ளி குழந்தைகளை பலாத்காரம் செய்வது மிகவும் அதிகரித்துள்ளது. ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து பாஜக பல்வேறு போராட்டங்களை நடத்திவருகிறது.
இந்நிலையில் ஈஸ்வரப்பா இன்று நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், "கர்நாடகாவில் பெண்களை பலாத்காரம் செய்ய லைசென்ஸ் கொடுத்துவிட்டார்கள் போல. அந்த அளவுக்கு பலாத்காரம் நடந்தும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல்வர் (சித்தராமையா) மற்றும் உள்துறை அமைச்சர் (ஜார்ஜ்) மகள்கள் பலாத்காரத்திற்கு உள்ளானால்தான் அந்த வலி அரசுக்கு தெரியும்" என்றார்.
ஈஸ்வரப்பா எப்போதுமே இப்படி தடாலடியாக பேசக் கூடியவர்தான் என்றாலும், மாநில முதல்வரை அவமதிக்கும் வகையிலும், அவர் குடும்பத்து பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியினர் பெங்களூருவில் ஈஸ்வரப்பாவை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவரது உருவ பொம்மையை எரிந்த சம்பவமும் நடந்தது.
ஈஸ்வரப்பா சார்ந்த பாஜகவும், அவரது பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளது. மாநில வாஜக தலைவர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், "என்னதான் பெண்கள் மீதான கொடுமை குறித்த கோபம் ஈஸ்வரப்பாவுக்கு இருந்தாலும், இவ்வாறு பேசியிருக்க கூடாது. முதல்வர், உள்துறை அமைச்சர் அல்லது சாமானியரின் மகள் என யாராக இருந்தாலும் அவர்கள் நம் சகோதரிகள்தான். எந்த ஒரு பெண்ணும் இந்த நிலை ஏற்படக்கூடாது. ஈஸ்வரப்பாவின் பேச்சை பாஜக கண்டிக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications