பத்மநாபசாமி கோவில் புதையலை கண்காட்சிக்கு வைக்க தயார்: உம்மன் சாண்டி அறிவிப்பு
திருவனந்தபுரம்: பத்மநாபசாமி கோவிலின் ரகசிய அறையில் கண்டெடுக்கப்பட்ட நகைகளை சுப்ரீம் கோர்ட் அனுமதியுடன் கண்காட்சி வைக்கத் தயாராக உள்ளதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி அறிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ளது புகழ்பெற்ற பத்மநாப சாமி கோவில். திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையால் நிர்வகிக்கப்பட்டு வந்த இந்த கோவிலின் ரகசிய அறைகளில், ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பொற்குவியல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ரகசிய அறையில் இருந்த தங்கம், வைரம், வைடூரியம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களின் விவரப்பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று கேரள சட்டசபையில் பேசிய அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி, பத்மநாப சாமி கோவிலின் ரகசிய அறைகளில் கண்டெடுக்கப்பட்ட புதையலை சுப்ரீம் கோர்ட்டு அனுமதியுடன் அருங்காட்சியகம் ஒன்றில் கண்காட்சிக்கு வைக்க தயார் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது :-
உலகிலேயே முதல்முறையாக...
இந்த வகையான புதையல் உலகின் எந்த பகுதியிலும் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை.
நம்பிக்கை...
இந்த புதையலை இதுநாள் வரை தொடர்ந்து பாதுகாத்து வந்திருப்பதன் மூலம், மன்னர் பரம்பரை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை, திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையினர் உறுதி செய்துள்ளனர்.
புதையல் பற்றிய அறிக்கை...
கோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட புதையல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை இன்னும் அரசுக்கு கிடைக்கவில்லை.
விசாரணை...
இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் ஆகஸ்டு 6-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த விவகாரத்தில் அரசின் பதிலை அதற்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.