டோல்கேட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட எம்எல்ஏ.. கடுப்பில் பேரிகேடை உடைத்தார்.. கேரளாவில் பரபரப்பு
Recommended Video
திருச்சூர்: கேரளாவில் டோல்கேட்டில் கட்டணம் கேட்டும் கட்டாமல் போக முயன்ற எம்எல்ஏவை ஊழியர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததால் அவரும், அவருடன் வந்தவர்களும் கடுப்பாகி, டோல்கேட் பேரிகேடை உடைத்தனர்.
கேரள மாநிலம் பூஞ்சூர் சட்டசபை உறுப்பினர் சுயேச்சை எம்.எல்.ஏ. பி.சி. ஜார்ஜ். இவர் கேரள ஜன பிரகாசம் என்ற கட்சியின் நிறுவனர் ஆவார்.
இவரும் இவருடன் சிலரும் காரில் திருச்சூர் வந்தனர். அங்குள்ள டோல்கேட் ஒன்றில் இவர்களது காரை ஊழியர்கள் நிறுத்தி கட்டணம் கேட்டுள்ளனர். ஆனால் தான் எம்எல்ஏ என்பதால் கட்டணம் கேட்கக்கூடாது என்று ஜார்ஜ் கூறியுள்ளார். ஆனால் அதை ஏற்காத டோல்கேட் ஊழியர்கள் கட்டணம் கட்டுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் காரை செல்ல விடாமல் தானியங்கி பேரிகேடையும் அப்புறப்படுத்தவில்லை. இதனால் கோபமடைந்த எம்எல்ஏ வேகமாக கீழே இறங்கி அந்த பேரிகார்டை உடைத்து அப்புறப்படுத்தினார். அவருடன் வந்தவர்களும் அதை உடைத்து வண்டி செல்ல வழி ஏற்படுத்தினர்.
இதுகுறித்து பின்னர் ஜார்ஜ் கூறுகையில் நான் ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் சென்று கொண்டிருந்தேன். எனது காரில் எம்எல்ஏ ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அப்படி இருந்து தடுத்து நிறுத்தி தேவையில்லாமல் தாமதம் செய்தனர். எங்களைப் பற்றிக் கவலைக்கூட படவில்லை அவர்கள். நீண்ட நேரம் காத்திருந்த பின்னர்தான் இறங்கி தடுப்பை எடுத்தோம். எனக்கு அதற்கு உரிமை உள்ளது. அதைத் தவிர வேறு வழி அப்போது இல்லை என்றார்.
ஆனால் ஜார்ஜ் கோபப்படுவது இது முதல் முறையல்ல. முன்பு இப்படித்தான் எம்எல்ஏ ஹாஸ்டலில் சாப்பாடு கொண்டு வர தாமதானதால் சர்வர் பையனை போட்டு அடித்து விட்டார். அவருக்கு உதடு, கண்ணில் காயம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதேபோல கடந்த ஆண்டு ஜூன் மாதம் நில விவகாரம் ஒன்றில் தனக்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியபோது பிஸ்டலைத் தூக்கி காட்டி மிரட்டி பரபரப்பு ஏற்படுத்தினார்.