சம்பள பாக்கியை வாங்கி கொடுங்க: மோடிக்கு கடிதம் எழுதிய கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் !
டெல்லி: கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிருவனத்தில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஊழியர்களின் பல மாத சம்பளம் கொடுக்கப்படாமல் உள்ளது. இதையடுத்து அந்நிறுவன ஊழியர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
மதுபான தயாரிப்பு தொழிலில் கொடிகட்டிப் பறந்த விஜய் மல்லையா கிங் பிஷர் ஏர்லைன்ஸ் எனும் விமான சேவையை தொடங்கினார். அந்த நிறுவனம் நிதி நெருக்கடிக்குள்ளாகியது. இதனால் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 2012ஆம் ஆண்டு இதன் விமான சேவை நிறுத்தப்பட்டு உரிமமும் ரத்தானது.
இதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தில் வேலை பார்த்த ஆயிரக்கணக்கான ஊழியர்களின் பல மாத சம்பளம் இன்னும் பட்டுவாடா செய்யப்படாமல் உள்ளது. பல்வேறு போராட்டங்களை நடத்திய போதும் அவர்களின் சம்பள பாக்கியை கொடுக்க விஜய் மல்லையா தீவிர முயற்சி எதுவும் எடுக்கவில்லை.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கிங்பிஷர் முன்னாள் ஊழியர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். பிரதமர் உடனடியாக தலையிட்டு தங்களின் கடின உழைப்புக்கான சம்பள பாக்கியை பெற்றுத் தருவதற்கு உதவி செய்ய வேண்டும் என அனைத்து ஊழியர்களின் சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, கடன் விவகாரம் தொடர்பாக கிங்பிஷர் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிதி அதிகாரி ரகுநாதனிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடத்தினர்.