ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் - தவறாக ரிசல்ட் கொடுத்த 'லேப்': ரூ.3.5 லட்சம் நஷ்ட ஈடு தர உத்தரவு
புனே: மகாராஷ்டிராவில் குழந்தைநல மருத்துவர் ஒருவருக்கு ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் பாதிப்பு இருப்பதாக தவறான ரிசல்ட் கொடுத்த லேப் ஒன்று 3.5 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும் என்று நுகர்வோர் குறைதீர்க்கும் மையம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் புனே நகர் பகுதியின் கிர்க்கீ என்ற இடத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த 2003 ஆம் ஆண்டு குழந்தை மருத்துவ நிபுணராக ஒரு பெண் பணிபுரிந்து வந்தார்.
அதே ஆண்டு மே மாதம் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எச்ஐவி பாசிடிவ் தகுதி கொண்ட பெண்ணிற்கு பிறந்த குழந்தையைப் பரிசோதித்துக் கொண்டிருந்தபோது அவரது விரலில் தவறுதலாக ஊசியால் குத்திக்கொண்டார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக அவருக்கு பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொற்றுநோய் என்பதன் காரணத்தினால் பல பரிசோதனை மையங்களிலும் இவருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இறுதியாக டெல்லியில் உள்ள நிபுணத்துவம் மிகுந்த டாக்டர் லால் பரிசோதனை நிலையத்தில் அவரது ரத்தம் பரிசோதிக்கப்பட்டது.
2003ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதி அந்த பரிசோதனை மையத்தின் புனே கிளையில் அளிக்கப்பட்ட மருத்துவரின் சோதனை முடிவுகள் அவருக்கு எச்ஐவி பாசிடிவ் என்று குறிப்பிட்டிருந்தது.
இதனால் அவரது குடும்பமே அதிர்ச்சிக்கு உள்ளாகியது. இந்த அறிக்கை ஏற்படுத்திய குழப்பத்தினால் அவர் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கும் தன்னை உட்படுத்திக்கொண்டார்.
இறுதியாக அவருக்கு இந்த நோய்த் தாக்கம் அறவே இல்லை என்று அதே ஆண்டு செப்டம்பர் மாதம் தெரிவிக்கப்பட்டது. இதன்பின்னரே அவர் நிம்மதி அடைந்தார்.
ஒரு தவறான மருத்துவ அறிக்கையினால் தன்னை இத்தனை பிரச்சினைகளுக்கும், மனவேதனைகளுக்கும் ஆளாக்கிய ஆய்வகத்தின்மீது அந்தப் பெண் மருத்துவர் புதுடெல்லி நுகர்வோர் குறைதீர் மையத்தின் கீழ் புகார் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த குழுவின் தலைவர் இதற்கான நஷ்டஈடாக ரூ.3.5 இலட்சத்தினை அளிக்கும்படி சமீபத்தில் அந்த பரிசோதனை மையத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தவறான விளம்பரங்கள் மற்றும் திறனற்ற மருத்துவப் பணியாளர்களைக் கொண்டு நுகர்வோரை இந்த ஆய்வகம் சுரண்டுவது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கின்றது என்றும் அவர் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.