லக்கிம்பூர் படுகொலை: 5,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்- மத்திய அமைச்சர் மகன் முதன்மை குற்றவாளி!
லக்கிம்பூர்: உ.பி. மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் மோதி படுகொலை செய்த வழக்கில் 5,000 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். நாட்டையே உலுக்கிய லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா முதன்மை குற்றவாளி எனவும் போலீசார் குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டி உள்ளனர்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக உ.பி. மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். லக்கிம்பூருக்கு அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கடந்த அக்டோபர் 3-ந் தேதி வருகை தந்தார்.

லக்கிம்பூர் படுகொலை
அவருக்கு கறுப்புக் கொடி காட்டும் வகையில் விவசாயிகள் அமைதியாக பேரணி நடத்தினர். அப்போது விவசாயிகள் மீது வேண்டும் என்றே சொகுசு கார் ஏற்றப்பட்டது. இதில் 4 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே துடித்து துடித்து இறந்தனர். அப்போதும் ஆத்திரம் தீராத கும்பல் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தியது. இதனையடுத்து நிகழ்ந்த வன்முறைகளில் மேலும் 4 பேர் மரணம் அடைந்தனர். லக்கிம்பூர் வன்முறைகளில் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர்.

மத்திய அமைச்சர் மகன் கைது
லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த படுகொலை சம்பவத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்ட பிறகு உ.பி.யில் ஆளும் பாஜக அரசு நடவடிக்கை எடுத்தது. லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா மற்றும் அவரது கூட்டாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். அதேபோல் வன்முறையில் ஈடுபட்டதாக விவசாயிகளும் கைது செய்யப்பட்டனர்.

எதிர்க்கட்சிகள் அழுத்தம்
இச்சம்பவத்தால் அஜய் மிஸ்ரா, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் அல்லது அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்நிலையில் லக்கிம்பூர் படுகொலை திட்டமிட்ட சதி என்றும் விசாரணை குழு தெரிவித்தது. இதனை முன்வைத்து அஜய் மிஸ்ராவை டிஸ்மிஸ் செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கின.

மத்திய அமைச்சர் மகன் முதல் குற்றவாளி
இந்நிலையில் லக்கிம்பூர் படுகொலை வழக்கில் போலீசார் 5,000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். இதில் லக்கிம்பூரில் மொத்தம் 8 பேர் கொலல்ப்பட்ட சம்பவத்தில் முதன்மை குற்றவாளி மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராதான்; அவர்தான் சம்பவ இடத்தில் இருந்து வன்முறைகளை நிகழ்த்தினார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் பதவிக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications