பாக். எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க 40 இடங்களில் லேசர் சுவர் அமைக்க முடிவு!
டெல்லி: பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்க எல்லைப் பகுதியில் 40 இடங்களில் லேசர் சுவர் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படை தளம் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உஜ் ஆற்றங்கரை வழியாக ஊடுருவியிக்கலாம் எனக் கருதப்படுகிறது. அந்த பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை கண்டறியும் லேசர் சுவர்கள் அமைக்கப்படவில்லை.
ஆற்றுப்படுகைகளில் லேசர் சுவர்
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையில் வேலியிடப்படாத பகுதிகள் அனைத்தியும் மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக பஞ்சாப் மாநில எல்லைப் பகுதிகளில் ஆற்றுப்படுகைகளில் இந்த லேசர் சுவர் அமைக்கப்பட உள்ளது.
40 இடங்களில்...
முன்னர் 6 இடங்களில் இந்த லேசர் சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது 40 இடங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
லேசர் தொழில்நுட்பம்
லேசர் தொழிலுட்ப விளக்குகள் சுவர் போன்று மெல்லிதாக நீண்டிருக்கும். பயங்கரவாதிகள் இதைத் தாண்ட முயற்சிக்கும்போது சைரனை ஒலிக்கச் செய்யும். மேலும் ஊடுருவல் முயற்சி எங்கே நடக்கிறது என்பதையும் அறிய முடியும். உடனடியாக அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்து தீவிரவாதிகள் அல்லது போதைப் பொருட்கள் கடத்தல்காரர்களை வேட்டையாட முடியும் என்கின்றன ராணுவ வட்டாரங்கள்.
ஜம்முவில்..
காஷ்மீர் மாநிலம் ஜம்மு பகுதியிலும் ஆற்றின் குறுக்கே இந்த லேசர் தடுப்பு சுவர் ஏற்கனவே அமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.