பாகிஸ்தானில் பயங்கரம்..மர்ம நபர்களால் சட்டக்கல்லூரி முதல்வர் சுட்டுக்கொலை
குவெட்டா: பாகிஸ்தானில் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சட்டக்கல்லூரி முதல்வரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் குவெட்டா நகரில், பலுசிஸ்தான் பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வந்தவர் அமானுல்லா அசாக்ஜாய். அவர் நேற்று தனது காரில் கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரது காரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த அமானுல்லா அசாக்ஜாய் ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்தார். அதைத்தொடர்ந்து தாக்குதல் நடத்திய நபர்கள் அங்கிருந்து தப்பினர்.
உடனடியாக அமானுல்லா அசாக்ஜாய் மீட்கப்பட்டு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்த விட்டார் என்று அறிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசாரும், எல்லை பாதுகாப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
சம்பவம் அறிந்த வழக்கறிஞர்கள் பெருந்திரளாக மருத்துவமனையில் குவிந்தனர். கல்லூரி முதல்வர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து நீதிமன்றங்களை புறக்கணிப்பதாக அறிவித்தனர். இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் மாகாண முதல்வர் சனவுல்லா ஜெஹ்ரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டதுடன், சம்பவம் தொடர்பான விரிவான அறிக்கையை அளிக்குமாறு போலீசாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்துக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பலியான அமானுல்லா அசாக்ஜாய் பலுசிஸ்தான் கவர்னர் மற்றும் பி.எம்.ஏ.பி. கட்சித் தலைவர் ஆகியோரின் மருமகன் ஆவார்.