ரூ500 இல்லாமல் மக்கள் அவதி... ரூ500 கோடியில் 'சுரங்க' மாபியா ஜனார்த்தன ரெட்டி மகளுக்கு திருமணம்!
சுரங்க மாபியா ஜனார்த்தன ரெட்டி மகளுக்கு ரூ500 கோடியில் திருமணத்தை நடத்தி வைத்தார்.
பெங்களூரு: ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் ரூ500 கூட கிடைக்காமல் மக்கள் 9-வது நாளாக பெரும் துயரத்தில் இருக்கின்றனர். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் ரூ500 கோடியில் சுரங்க மாபியா ஜனார்த்தன ரெட்டி தமது மகளுக்கு இன்று மிக ஆடம்பரமான திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். கருப்புப் பணத்தை ஒழிக்கப் போவதாக சொல்லும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் பலரும் இத்திருமணத்தில் கலந்து கொண்டனர்.
கர்நாடகா மாநிலத்தில் முந்தைய பாஜக அரசில் அமைச்சராக இருந்தவர் ஜனார்த்தன ரெட்டி. பின்னர் சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் தள்ளப்பட்டவர் ஜனார்த்தன ரெட்டி.
அப்போதே அவரது வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுவிட்டன. தற்போது ஜாமீனில் இருக்கும் ஜனார்த்தன ரெட்டி தம்முடைய மகளுக்கு இன்று திருமணத்தை நடத்தி வைத்தார்.
எல்சிடி, அரண்மனை செட்
இத்திருமணத்துக்கான அழைப்பிதழையே பல கோடி ரூபாய்க்கு எல்சிடி திரையுடன் வடிவமைத்து பணக்கார அகந்தையை வெளிப்படுத்தியவர். இன்றைய திருமணத்துக்கு 36 ஏக்கர் பரப்பளவில் விஜயநகர பேரரசின் அரண்மனை போன்ற செட் உருவாக்கப்பட்டிருந்தது.
எதியூரப்பா
நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பில் தமிழகத்தின் 160 நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்றனர். பாஜக மூத்த தலைவர்களான எதியூரப்பா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் தென்னிந்திய நடிகர் நடிகைகள் பலரும் பங்கேற்றனர்.
வெள்ளி பரிசு பொருட்கள்
திருமண வரவேற்பில் வாழ்த்தியவர்களுக்கு கொடுக்கப்பட்ட தாம்பூலத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி உள்ளிட்ட பரிசு பொருட்கள் இருந்தன. இன்று காலை நடைபெற்ற திருமணத்திலும் அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கலைநிகழ்ச்சிகள்
தென்னிந்திய, வட இந்திய நடிகர், நடிகைகளின் கலைநிகழ்ச்சிகளும் இத்திருமணத்தில் இடம்பெற்றன. அதேபோல் முன்னணி இசை அமைப்பாளர்களின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
யார் யார்?
கர்நாடக பாஜக தலைவர் எதியூரப்பா, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், எம்.பி. சோபனா, சிடி ரவி எம்.எல்.ஏ உள்ளிட்டோர் திருமணத்தில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள். கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான அனந்தகுமார், சதானந்த கவுடா இருவரும் இத்திருமணத்தில் பங்கேற்கவில்லை.
காங்கிரஸ் அமைச்சர்கள்
ஆனால் சதானந்த கவுடாவின் மனைவி இத்திருமணத்தில் கலந்து கொண்டார். கர்நாடகா உள்துறை அமைச்சரும் மாநில காங்கிரஸ் தலைவருமான பரமேஷ்வர், அமைச்சர் சிவகுமார் ஆகியோரும் இத்திருமணத்தில் பங்கேற்றனர்.