காட்டுப் பன்றிகள் மோதி சிறுத்தை பலி... கர்நாடகத்தில் பரிதாபம்
ஹாசன்: கர்நாடக மாநிலம் ஹாசன் அருகே காட்டு பன்றிகள் முட்டியதில் காயமடைந்த சிறுத்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஹாசன் மாவட்டம் பேளூர் தாலுகா வண்டிலக்கன கொப்பலு கிராமத்தில் அடிக்கடி ஒரு சிறுத்தை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. அந்த சிறுத்தையால் இதுவரையில் 4 கன்று குட்டிகளும், 2 பசுமாடுகள் அடித்து கொல்லப்பட்டுள்ளன. இதனால் பீதியடைந்த அந்த கிராம மக்கள், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன்பேரில் வனத்துறை அதிகாரிகளும் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில் வண்டிலக்கன கொப்பலு கிராமம் அருகே உள்ள அம்மன் கோவில் பின்புறம் காயங்களுடன் ஒரு சிறுத்தை மயங்கிய நிலையில் கிடப்பதை அப்பகுதி பொதுமக்கள் பார்த்தனர். உடனே அவர்கள் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் சிறுத்தையை மீட்டு சிகிச்சைக்காக பேளூரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஹாசன் டவுனில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுத்தை செத்தது. இதையடுத்து அந்த சிறுத்தையை வனத்துறை அலுவலக வளாகத்தில் வைத்து அதிகாரிகள் எரித்துவிட்டனர்.
இதுகுறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி சன்ன நஞ்சப்பா கூறுகையில், செத்த சிறுத்தைக்கு 2 வயது இருக்கும். அது பெண் சிறுத்தை ஆகும். காட்டுப்பன்றிகள் முட்டித்தள்ளியதில் இந்த சிறுத்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக உணவு சாப்பிடாமலும் இருந்துள்ளது. இதன்காரணமாகத்தான் அந்த சிறுத்தை செத்துள்ளது என்று கூறினார்.