மோடியைப் போலவே யு.எஸ். விசா மறுக்கப்பட்ட மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா எப்படி விசா மறுத்ததோ அதேபோல் மத்திய அமைச்சராக இருக்கும் ஜிதேந்திரசிங்குக்கும் அந்நாடு விசா மறுத்திருக்கிறது.
நரேந்திர மோடி அரசில் அமைச்சராக இருப்பவர் ஜிதேந்திர சிங். இவர் ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இவர்தான் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை நீக்குவதற்கான ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவோம் என்ற திரியை கொளுத்திப் போட்டவர். இது காஷ்மீரில் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதே ஜிதேந்திரசிங்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு அமர்நாத் கோயிலுக்கான நில ஒதுக்கீடு விவகாரத்தில் இந்துக்களின் போராட்டத்தை முன்னெடுத்தவர். அமர்நாத் கோயிலுக்கு ஜம்மு காஷ்மீர் மாநில அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்தது.
இதற்கு எதிராக அங்கு போராட்டம் வெடித்தது. இதைத் தொடர்ந்து மாநில அரசு அந்த உத்தரவை திரும்பப் பெற்றது. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. இது அம்மாநிலத்தை உலுக்கியது. ஏராளமான உயிர் பலிகள் ஏற்பட்டன.
2008 ஆம் ஆண்டு அமர்நாத் கோயிலுக்கு நிலம் வழங்கக் கோரி இந்தப் போராட்டத்தை நடத்தியது ஸ்ரீ அமர்நாத் சங்கர்ஷ் சிமிதி. இதன் செய்தித் தொடர்பாளராக இருந்தவர்தான் ஜிதேந்திரசிங். தொழில்முறை மருத்துவராக இருந்த போதும் அதை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் பாதைக்கு திரும்பியவர்.. ஜம்மு காஷ்மீரின் ஊடகங்களில் பல அரசியல் கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதி வந்தவர் ஜிதேந்திரா.
அமர்நாத் கோயில் நிலப் போராட்ட விவகாரத்தைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு இறுதியில் அவருக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்துவிட்டது. பிரதமர் மோடியைப் போல அமெரிக்கா விசா மறுக்கப்பட்டவராக இருக்கிறார் அவரது அமைச்சரவை சகா ஜிதேந்திரசிங் என்பது குறிப்பிடத்தக்கது.