சிவராத்திரியன்று 54 வேட்பாளர்களை அறிவித்த பாஜக!
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான முதலாவது வேட்பாளர் பட்டியலை நேற்று பாரதிய ஜனதா வெளியிட்டுள்ளது. மொத்தம் 54 வேட்பாளர்கள் பெயர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
நேற்று மஹா சிவராத்திரி என்பதால் அன்றைய தினம் தனது முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது பாஜக.
டெல்லியில் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பின்னர் லோக்சபா தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதை அக்கட்சியின் பொதுச் செயலாளர் தவர்சந்த் கெலோத் வெளியிட்டார்.
அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், கோவா, மேற்குவங்கம், ஒடிஷா, மகாராஷ்டிரா, ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய 8 மாநிலங்களில் இருந்து 54 தொகுதிகளுக்கு மட்டும் முதல்கட்டமாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பட்டியலில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் நிதின் கத்காரி, பிரபல மேஜிக் நிபுணர் பி.சி. சர்க்கார், ஹிமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் சாந்த குமார், மூத்த தலைவர் கோபிநாத் முண்டே ஆகியோரின் பெயரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் தொகுதியில் நிதின் கத்காரி போட்டியிடுகிறார்.
இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா, ஹிமாச்சல் பிரதேசம் தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு ஆதரவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சிவராத்திரியை மிஸ் பண்ணி விடக் கூடாது என்பதற்காகவே ஒரு சும்மா வேட்பாளர் பட்டியலை அது வெளியிட்டுள்ளதாக கருதப்படுகிறது.