கோவிலில் அனுமன் சிலை உடைப்பு.. மக்கள் போராட்டத்தால் காஷ்மீரில் பதற்றம்.. போலீஸ் பேச்சுவார்த்தை
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள சிவா கோவிலில் அனுமன் சிலை உடைக்கப்பட்டதால் பதற்றம் நிலவும் நிலையில், இந்த செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் காதுவா மாவட்டம் தார் செல்லும் ரோட்டில் உள்ள கிராமங்களில் இந்துக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களின் இஷ்ட தெய்வங்களுக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்தி வருகின்றனர்.
அதன்படி காதுவா மாவட்டத்தில் பாலக் கிராமத்தில் சிவா கோவில் உள்ளது. இந்த கோவிலில் அனுமன் சிலை உள்பட பல்வேறு தெய்வங்களின் சிலைகள் உள்ளன.
உதய்ப்பூர் கொலை: வலைதளத்தில் கருத்து கூறிய சிறுமிக்கு கொலை-பலாத்கார மிரட்டல்.. காஷ்மீர் நபர் கைது
சிலை உடைப்பு
இந்நிலையில் கிராம மக்கள் இன்று கோவிலில் தரிசனம் செய்ய சென்றனர். அப்போது அனுமன் சிலை உடைக்கப்பட்டு இருந்தது. யாரோ மர்மநபர்கள் வந்து அனுமன் சிலையை சேதப்படுத்திவிட்டு சென்றது தெரியவந்தது. இதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் தார் ரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
போராட்டம்- கோஷம்
சிலையை சேதப்படுத்திய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர். இந்த தர்ணாவில் பாஜகவினரும் பங்கேற்றனர். இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சிலையை சேதப்படுத்தியவர்களை 24 மணிநேரத்தில் கைது செய்வதாக போலீசார் கூறினர்.
பதற்றம்
இருப்பினும் கிராம மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. எஸ்டிபிஓ பிலாவர் அரவிந்த் குமாரின் பேச்சுவார்த்தைக்கும் போராட்டக்காரர்கள் செவிசாய்க்கவில்லை. இதனால் பதற்றமான சூழல் உருவானது. இந்த போராட்டம் தொடர்ந்ததால் சுமார் 3 மணிநேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்டதூரம் அணிவகுத்து நின்றன.
போலீஸ் வலை
இதுபற்றி போராட்டக்காரர்கள் கூறுகையில், ‛‛சிலர் சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலை உடைப்பில் ஈடுபட்டவர்களை தேடுவருகின்றனர்.