மேகி நூடுல்ஸ் உற்பத்தி ஆலை மூடல்... வேலையிழந்த 500 தொழிலாளர்கள்
பனாஜி: மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டதை அடுத்து கோவா மாநிலத்தில் இயங்கி வந்த மேகி நூடுல்ஸ் ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து அந்த ஆலையில் பணியாற்றி வந்த 500 ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நெஸ்லே நிறுவனம் மேகி நூடுல்ஸை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. குழந்தைகள் முதல். இளைஞர்கள் வரை, அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் மேகி நூடுல்ஸில், காரீயத்தின் அளவு, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை காட்டிலும், அதிகமா உள்ளதாக கண்டறியப்பட்டதால், இந்தியாவில் பல மாநிலங்களில் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டது. அதோடு இந்தியாவில் உற்பத்தி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெஸ்லே நிறுவனம் நூடுல்ஸ் தயாரிப்புக்கான தொழிற்சாலையை கோவா மாநிலம் பிச்சோலிம் என்ற ஊரில் அமைத்துள்ளது. அங்கு கடந்த 1997ம் ஆண்டு முதல் மேகி நூடுல்ஸ் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேகி நூடுல்ஸ்க்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து இந்த நிறுவனத்தில் நூடுல்ஸ் தயாரிப்பு பணி முடங்கியது. கடந்த 5ம் தேதி பிச்சோலிமில் உள்ள மேகி நூடுல்ஸ் தயாரிப்பு தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதையடுத்து 500 ஒப்பந்த தொழிலாளர்களை வேலைக்கு வர வேண்டாம் என்று நெஸ்லே நிறுவனம் கூறிவிட்டது. ஆலை செயல்படத் தொடங்கியதும், அனைத்து தொழிலாளர்களுக்கும் தெரிவிக்கப்படும் என்றும் ஆலை நிர்வாகம் கூறிவிட்டதால் தினக்கூலி பெற்று வந்த தொழிலாளர்கள், வாடிய முகத்துடன், தொழிற்சாலையின் வாயிலில் சோகத்தோடு அமர்ந்துள்ளனர்.
மேகி நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் பிச்சோலிம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த சுமார் 800 ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் தினமும் சராசரியாக ரூ. 300 சம்பளம் பெற்று வந்தனர். இந்த நிலையில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு பல்வேறு மாநிலங்கள் தடை விதித்துள்ளதால் இவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முன்பு விவசாய பணிகள் செய்து வந்த அவர்களுக்கு நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் நல்ல சம்பளம் கிடைத்தது. அந்த வேலை பறிபோனதால் அடுத்தவேலை உணவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் காத்திருக்கின்றனர் தொழிலாளர்கள். பல்லாயிரக்கணக்கான உயிரைக் காக்க நூடுல்ஸ் உற்பத்தியை அரசு நிறுத்தியதை தொடர்ந்து 500 தொழிலாளர்களின் வேலை பறிபோயுள்ளது என்பதுதான் சோகம்.