கோவாவுக்கு ஷிப்ட் ஆகும் ஷிண்டே கோஷ்டி சிவசேனா எம்.எல்.ஏக்கள்- சொகுசு ஹோட்டலில் 71 ரூம்கள் ரெடி
குவஹாத்தி/ பனாஜி: அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் ஒரு வாரத்துக்கும் மேலாக தங்கி இருந்த சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏக்கள் கோவா மாநில தலைநகர் பனாஜியில் முகாமிட உள்ளனர்.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். மகாராஷ்ராவில் நடைபெற்ற சட்ட மேலவைத் தேர்தல் முடிவடைந்த உடனேயே இந்த கலகக் குரல் வெடித்தது.
உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான எம்.எல்.ஏக்கள் அனைவரும் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் சூரத் நகர் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். சூரத் சொகுசு விடுதியில் பாஜக மூத்த தலைவர்கள், சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு ஆதரவு கொடுத்தனர். அவர்களை சந்திக்க சிவசேனா மூத்த தலைவர்கள் முயற்சித்தும் கை கொடுக்கவில்லை.

குவஹாத்தியில் முகாம்
இதனையடுத்து அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்திக்கு அனைத்து அதிருப்தி எம்.எல்.ஏக்களும் சென்றனர். பாஜக ஆளும் அஸ்ஸாமில் கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தங்கி இருந்தனர். இதற்கு எதிராக சிவசேனாவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் போராட்டம் நடத்தின. மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளும் குவஹாத்தி ஹோட்டல் முன்பாக போராட்டம் நடத்தினர்.

உச்சநீதிமன்றம் தடை
அதேநேரத்தில் மகாராஷ்டிராவில் இருந்து குவஹாத்தி சென்று அதிருப்தி கோஷ்டியில் இணையும் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது. குவஹாத்தியில் முகாமிட்டபடியே அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேர் தங்களை தகுதி நீக்கம் செய்ய தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடந்தனர். உச்சநீதிமன்றமும் ஜூலை 11-ந் தேதி வரை 16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய இடைக்கால தடை விதித்தது.

சிவசேனாவின் மிரட்டல்
இன்னொரு பக்கம், குவஹாத்தியில் முகாமிட்டிருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு பல்வேறு வகைகளில் மகாராஷ்டிராவில் இருந்து சிவசேனா தலைவர்கள் மிரட்டல் விடுத்தனர். 40 பேரின் உடல்கள்தான் மும்பை சட்டசபைக்கு வரும்; ஆன்மா செத்துவிட்டது; நீங்க எல்லாம் நடமாடும் பிணங்கள் என்றெல்லாம் கூட விமர்சித்தனர். ஆனாலும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கோஷ்டி அசராமல் இருந்தது.

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு
இந்நிலையில் மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை மாலை 5 மணிக்குள் முதல்வர் உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார். இதனை எதிர்த்து உத்தவ் தாக்கரே, உச்சநீதிமன்றத்தில் முறையிட உள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ள நிலையில் குவஹாத்தியில் இருந்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வெளியேறுகின்றனர்.

கோவாவுக்கு ஷிப்ட்
குவஹாத்தியில் இருந்து கோவாவுக்கு வரும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அங்கு சொகுசு விடுதியில் தங்க உள்ளனர். இதற்காக கோவா சொகுசு ஹோட்டல் ஒன்றில் மொத்தம் 71 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் மகாராஷ்டிரா அரசியலில் நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications