நேரம் முடிந்துவிட்டது.. பட்னாவிஸ் உடனே பதவி விலக வேண்டும்.. சஞ்சய் ராவத் விடாப்பிடி.. ஏன் இப்படி?
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்க என்னதான் வழி இருக்கிறது என்று பாஜக தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வந்து இரண்டு வாரம் ஆகியும் இன்னும் அங்கு பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை.
மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது. அங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை.

பேட்டி அளித்துள்ளார்
இந்த நிலையில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தற்போது மகாராஷ்டிரா சூழ்நிலை குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், பாஜக கட்சி எங்களுடன் கூட்டணி வைத்து மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். நாங்கள் எங்கள் முடிவில் உறுதியாக இருக்கிறோம். முதல்வர் பதவி இல்லாமல் நாங்கள் ஆட்சி அமைக்க ஆதரவு தர முடியாது.

என்ன வளர்ச்சி
எங்கள் கட்சியும் வளர வேண்டும். மகாராஷ்டிராவில் மாற்றத்தை காண வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தை சிவசேனா கட்சி கொண்டு வரும். பாஜக தனியாக பெரும்பான்மை பெற்று இருந்தால் நாங்கள் பிரச்சனை செய்து இருக்க மாட்டோம்.

பெரியவர் போல
எங்களுக்கு அண்ணன் போல இருந்து பாஜக செயல்பட நினைக்க கூடாது. நாங்களும் தனித்த கட்சி என்பதை பாஜக உணர வேண்டும். முதல்வர் பதவி தருவவதாக இருந்தால் மட்டும் பாஜக தலைவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம். இல்லையென்றால் வேண்டாம்.

மகாராஷ்டிரா அரசு
மகாராஷ்டிராவில் நாளையோடு பாட்னாவிஸ் ஆட்சி காலம் முடிகிறது. இதனால் உடனே அவர் பதவி விலக வேண்டும். அவர் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்க வேண்டும். ஆளுநரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும், என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications