சட்டங்களால் மட்டுமே ஊழலை ஒழித்து விட முடியாது, அதற்கு நல்ல பிரதமர் வேண்டும்: மோடி
டெல்லி: சட்டங்கள் இயற்றுவதால் மட்டுமே ஊழலை ஒழித்து விட முடியாது, உண்மையிலேயே ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற இலட்சியம் இருக்க வேண்டும். அதற்கு அனுபவமும், வலிமையும் வாய்ந்த தலைமையும் தேவை' எனத் தெரிவித்துள்ளார் பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி.
விரைவில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் வேலைகளில் கட்சிகள் மற்றும் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றது. பாஜகவின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி நாடு முழுவதும் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் பிரபல இந்தி நாளேடு ஒன்றுக்கு மோடி அளித்துள்ள சிறப்பு பேட்டியில் ‘சட்டங்களால் மட்டும் ஊழலை ஒழித்து விட முடியாது' என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-
முக்கிய முடிவு...
நாடு இப்போது முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். 3-வது அணி என்பது நாடு பெரும் விலை கொடுக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தி விடும். தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டியதும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத்தக்கதுமான அரசுதான் மத்தியில் தேவை.
காங்கிரசுக்கு உதவும் 3-வது அணி...
3-வது அணி தேவை என்று வக்காலத்து வாங்குகிற அனைத்து அரசியல் கட்சிகளும், அடிப்படையில் காங்கிரசுக்கு எதிரானவை. ஆனால் அவையெல்லாம் ஒரு நேரத்தில் அல்லது பிறிதொரு நேரத்தில், அரசியல் சந்தர்ப்பவாதம் காரணமாக, காங்கிரசுடன் கரம் கோர்க்க வேண்டிய வலுக்கட்டாயத்துக்கு ஆளாகின்றன. நாட்டில் இப்போது காங்கிரசுக்கு எதிரான கோபம் வெளிப்படும் நேரத்தில், மூன்றாவது அணிக்காக உழைக்கிறவர்கள், ஒரு விதத்தில் உண்மையிலேயே காங்கிரசுக்கு உதவுகின்றனர் என்பதுதான் நிதர்சனம்.
நம்பகத்தன்மையுள்ள தலைமை...
அவர்கள் (மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு) ஊழல்வாதிகளாகவோ அல்லது தங்கள் சுய பலவீனங்களின் காரணமாக ஊழலுக்கு ஒப்புதல் அளிக்கிறவர்களாகவோ இருக்கிறபோது, யார் ஊழலை தடுத்து நிறுத்த முடியும்? ஊழலை தடுத்து நிறுத்துவதற்கு, தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் (பிரதமர்) நம்பகத்தன்மை உடையவர்களாக இருக்க வேண்டும்.
சட்டங்கள் போதாது...
ஊழலை வெறும் சட்டங்களால் மட்டுமே ஒழித்து விட முடியாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். உண்மையிலேயே ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற இலட்சியம் இருக்க வேண்டும். அதற்கு அனுபவமும், வலிமையும் வாய்ந்த தலைமையும் (பிரதமர்) தேவை. ஊழலை வேரோடு வீழ்த்துவதற்கு இது அவசியம். அந்த வகையில், மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி அமைகிறபோது, ஊழலை சகித்துக்கொள்ளாத அளவில் கொள்கை வகுத்து பின்பற்றப்படும் என்ற வாக்குறுதியை வழங்குகிறேன்.
தனிப்பட்ட தாக்குதல்கள்...அரசியல் எதிரிகள் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் தொடுக்கிறேன் என்று சொல்லப்படுவதாக கூறுகிறீர்கள். தனிப்பட்ட தாக்குதல்களை நான் நிறுத்தினாலும்கூட, நாட்டு நலனின் அடிப்படையில் மன்னராட்சி போன்ற பரம்பரை அரசியலை விமர்சிக்கிறேன். இதை தனிப்பட்ட விமர்சனமாக கருதி விடுகின்றனர்.
நான் சர்வாதிகாரியா...?ஒரு சர்வாதிகாரி ஆகிற அளவுக்கு நான் துணிச்சல் மிக்கவன் என்று என் மீது குற்றம் சாட்டப்படுகிறது. அதை நான் நிராகரிக்கிறேன். நாட்டில் இந்த நாளில், முடிவுகள் எடுக்க முடியாத நிலைதான் ஒழுங்குமுறை என்ற சூழல் உருவாகி விட்டது. உறுதியான முடிவு எடுக்கிற தலைமை, இப்படிப்பட்ட விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியதாகி விடுகிறது.
காலவரையறை அவசியம்....
எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன்பாக அனைவருடனும் ஆலோசிக்க வேண்டியது அவசியம் என நம்புகிறேன். ஆனால் முடிவு எடுத்து விட்ட பின்னர், அதை உரிய கால வரையறைக்குள் அமல்படுத்திவிட வேண்டும் என்பது அவசியமானது. இல்லாவிட்டால், நாம் முடங்கிப்போய் விட்டதாக ஆய்வாளர்களால் கருதப்படுவோம்.
மத்திய-மாநில ஒருங்கிணைப்பு....
மத்திய அரசு எல்லா மாநிலங்களையும் ஒரே மாதிரியாக நடத்துவதில்லை. மத்திய அரசும், மாநில அரசுகளும் ஓரணியில் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் வளர்ச்சி என்பது சாத்தியமாகும். பிரதமருக்கும், மாநில முதல்வர்களுக்கும் இடையே ஒத்துழைப்பு இருக்க வேண்டும்.
பணவீக்கம்...
100 நாளில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி விடுவோம் என்று கூறித்தான் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகளாகியும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் காங்கிரஸ் தோல்வி கண்டுள்ளது.
அரசியல் துஷ்பிரயோகம்....
கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, அனைத்து அரசு எந்திரங்களையும் அரசியல் ரீதியில் தவறாகப் பயன்படுத்தி வருகிறது. நல்ல நிர்வாகம் அல்லது நல்லாட்சி என்பது, அரசாங்கம் கொள்கைகளின் அடிப்படையில் செயல்படுகிறபோதுதான் அமையும்.
ஏழைகளுக்கு முதல் உரிமை...
நாட்டின் வளங்களில் ஏழைகளுக்குத்தான் முதல் உரிமை என்பதுதான் என் வலுவான கருத்து. ஏழைகளுக்கு மானியங்கள் தருவது நியாயமானதுதான். இதை பிரச்சினை ஆக்கக்கூடாது.
ஏழைகள் ஓட்டு வங்கிகளா...?
ஆனால் இதில் முக்கிய மாறுபாடு என்னவென்றால், காங்கிரசார் ஏழைகளை தங்களது ஓட்டு வங்கியாகக் கருதுகின்றனர். அதனால்தான் அவர்கள் ஏழைகளாகவே தொடர வேண்டும்; அரசாங்கத்தையே சார்ந்திருக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. அப்போதுதான் தனது ஓட்டு வங்கி எப்போதும் நிலைத்திருக்கும் என அது கருதுகிறது. ஆனால் ஏழைகள் வறுமைக்கு எதிராகப் போராட ஏற்ற விதத்தில் அதிகாரம் பெற வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.
அண்டை நாடுகளுடன் நல்லுறவு...
ஒரு வலுவான நாடுதான் அண்டைநாடுகளுடன் நல்லுறவைப் பராமரிக்க முடியும். அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பராமரிக்கிறபோது, நாட்டின் நலன்தான் முன்னிறுத்தப்படும்.
குஜராத்தைப் போல....
மக்கள் ஆதரவு அரசாக, நல்லாட்சி தருகிற அரசாக மத்தியில் அமைய வேண்டும். நாட்டை விரைவான முன்னேற்றப்பாதையில் அது அழைத்துச்செல்ல வேண்டும். குஜராத்தைப் போன்று நாடு முழுவதும் 10 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சி காண வேண்டும்' என இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications